சிஎஸ்கே பலம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பலம் தோனி. அதற்கு அடுத்து முக்கியமான பலம் நீண்ட காலமாக அணியை விட்டு பிரியாமல் ஆடி வரும் வீரர்கள் ஒரே குடும்பமாக நல்ல புரிதலுடன் இருப்பது. வீரர்கள் தனிப்பட்ட முறையில் மட்டுமின்றி, தங்கள் குடும்பத்தினரையும் தங்களுடன் அழைத்து வருவார்கள். அவர்களும் ஒரே குடும்பமாக ஒன்றாக தங்கி, விளையாடி கொண்டாடுவார்கள்.
குடும்பத்துடன் சிஎஸ்கே வீரர்கள்
ஐபிஎல் அணியை ஒரே குடும்பமாக மாற்றியது தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம். சுமார் இரண்டு மாத காலம் ஐபிஎல் தொடருக்காக வீரர்கள் தங்களை குடும்பத்தை பிரியக் கூடாது என்பதால் அவர்களையும் வீரர்கள் உடன் இருக்கும்படி கடந்த சீசன்களில் பார்த்துக் கொண்டது சிஎஸ்கே அணி.
மறக்க முடியாத காட்சிகள்
2019 ஐபிஎல் தொடரில் கூட சில சம்பவங்களை யாராலும் மறக்க முடியாது. ஷேன் வாட்சன் மற்றும் இம்ரான் தாஹிரின் மகன்களுக்கு இடையே கேப்டன் தோனி ஓட்டப் பந்தயம் நடத்தியது, ஸிவா தோனி மற்றும் கிரேசியா ரெய்னா போட்டிகளுக்கு இடையே குரல் எழுப்பியது, நடனம் ஆடியது என பல சம்பவங்கள் இருக்கிறது.
கடும் விதிமுறைகள்
2020 ஐபிஎல் தொடரில் இதற்கு வாய்ப்பு இல்லாத நிலை உருவாகி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் தாமதம் ஆகி உள்ள ஐபிஎல் தொடர், கடும் முன்னெச்சரிக்கை விதிமுறைகளுடன் நடக்க உள்ளது. பிசிசிஐ கடந்த வாரம் அந்த விதிமுறைகளை ஐபிஎல் அணிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.
அழைத்துச் செல்லலாம்
அதில் வீரர்கள், பயிற்சியாளர்கள் தங்கள் குடும்பத்தினரை அழைத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்களும் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என பிசிசிஐ கூறி இருந்தது. அவை அனைத்தையும் ஐபிஎல் அணிகள் தான் உறுதி செய்ய வேண்டும்.
இதையெல்லாம் பின்பற்றணும்
குடும்பத்தினரும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் கொரோனா வைரஸ் பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும், உணவுகளை பரிமாறிக் கொள்ளக் கூடாது, மற்ற வீரர்கள் அருகே செல்லக் கூடாது, போட்டி மற்றும் பயிற்சியின் போது மைதானத்தில் இருக்கக் கூடாது உள்ளிட்ட விதிமுறைகளை பிசிசிஐ வகுத்துள்ளது.
கூடுதல் சுமை
இந்த கடுமையான விதிமுறைகளை பின்பற்றுவது கடினம். மேலும், அதை ஐபிஎல் அணிகள் கண்காணிப்பதும் கூடுதல் சுமை ஆகும். இந்த நிலையில், சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தங்கள் அணியின் முடிவு பற்றி கூறி உள்ளார்.
இதுதான் சிஎஸ்கே முடிவு
சிஎஸ்கே அணியினரின் குடும்பத்தினர் யாரும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பயணம் செய்யப் போவதில்லை எனவும், முதல் பகுதி வரை இந்த நிலை தொடரும் என்றும் கூறினார். அதன் பின் அங்குள்ள சூழ்நிலையைப் பொறுத்து குடும்பத்தினரை அழைப்பது பற்றி முடிவு எடுக்கப்படும் என்றார்.