ஷேன் வாட்சன்
ஆஸ்திரேலிய வீரரான ஷேன் வாட்சன் 2008 முதல் ஐபிஎல் தொடரில் முக்கிய வீரராக வலம் வந்தார். 2008 ஐபிஎல் கோப்பையை ராஜஸ்தான் அணிக்காக பெற்றுத் தந்ததில் அவருக்கு பங்கு உண்டு. அதே போல 2018 ஐபிஎல் கோப்பையை இறுதிப் போட்டியில் சதம் அடித்து பெற்றுத் தந்தார் ஷேன் வாட்சன்.
சிஎஸ்கே பிணைப்பு
அவர் ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் உள்ளிட்ட அணிகளில் ஆடி இருந்தாலும் சிஎஸ்கே அணியுடன் அவருக்குஅதிக பிணைப்பு இருந்தது. சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்ற பின் தான் அவர் சிஎஸ்கே அணியில் இணைந்தார். சிஎஸ்கே ரசிகர்கள் அவர் மீது எப்போதும் தனி அன்பு வைத்துள்ளனர்.
மோசமான தொடர்
2020 ஐபிஎல் தொடரில் பங்கேற்ற ஷேன் வாட்சன் சரியாக ரன் குவிக்கவில்லை. சிஎஸ்கே அணியும் தோல்விகளை சந்தித்து பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்தது. ஷேன் வாட்சன் அணியில் தன் முக்கியத்துவத்தை இழந்தார். ருதுராஜ் கெயிக்வாட் அவரது இடத்தை பிடித்துள்ளார்.
ஓய்வு முடிவு
வயதான நிலையில் டி20 லீக் தொடர்களில் மட்டுமே ஆடி வந்த வாட்சன் இனி அவற்றில் இருந்தும் ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளார். தன் ஓய்வு முடிவை சிஎஸ்கே வீரர்களிடம் அவர் ஏற்கனவே கூறி விட்டதாக தெரிய வந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் அறிவிப்பு
ஆஸ்திரேலியாவுக்கு சென்று தன் குடும்பத்தினரிடம் பேசிய பின் அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறும் அறிவிப்பை அவர் வெளியிட உள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளது. இந்த செய்தி வெளியானது முதல் சிஎஸ்கே ரசிகர்கள் உணர்ச்சிகரமான மனநிலையில் உள்ளனர்.
சிஎஸ்கே ரசிகர்கள் உருக்கம்
ஷேன் வாட்சனுக்கு நன்றி கூறும் வகையில் ட்விட்டரில் "ThankYouWatson" என்ற ஹேஷ்டேக் வைரல் ஆகி வருகிறது. இதில் வாட்சனின் சாதனையை பகிர்ந்து, தங்களுக்கு எந்த அளவுக்கு அவரை பிடிக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ரத்தம் சிந்திய தருணம்
அதில் பலரும் 2019 ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஷேன் வாட்சன் காலில் காயத்தால் ரத்தம் வழிந்த நிலையிலும், அதை பொருட்படுத்தாமல் ஆடியதை நினைவுகூர்ந்து அவருக்கு நன்றி கூறி வருகின்றனர். அந்த பதிவுகள் மிகவும் உருக்கமாக உள்ளன.
அர்ப்பணிப்பு
சிஎஸ்கே ரசிகர்கள் எப்போதுமே உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள் என்றாலும், இந்த பதிவுகள் வாட்சனின் அர்ப்பணிப்பை பாராட்டி இருந்தது மனதை உருக வைத்தது. 2019 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்த போதும் வாட்சன் காயம் அடைந்தும் ஆடியது வைரல் ஆனது. அப்போது வாட்சன் சிஎஸ்கே ரசிகர்களின் அன்பில் உருகினார்.
ஆஸ்திரேலியாவில் கூட கிடைக்காது
தற்போது வாட்சன் பார்ம் அவுட் ஆகி இருக்கிறார். சிஎஸ்கே அணி பிளே-ஆஃப் வாய்பையே பறிகொடுத்துள்ளது. இந்த நிலையிலும், வாட்சனுக்கு நன்றி கூறி மீண்டும் உருக வைத்துள்ளனர் சிஎஸ்கே ரசிகர்கள். இது போன்ற ரசிகர்கள் ஆஸ்திரேலியாவில் கூட அவருக்கு கிடைக்க மாட்டார்கள் என்பதே உண்மை.