எண்ணிக்கை அதிகம்
சிஎஸ்கே அணி கடந்த சீசனில் இறுதிப் போட்டி வரை முன்னேறியது. அந்த இறுதிப் போட்டி அதிக ரசிகர்கள் பார்த்த ஐபிஎல் போட்டியாக இருந்தது. இந்த சீசனின் முதல் போட்டியில் சிஎஸ்கே ஆடிய போது ரசிகர்கள் எண்ணிக்கை முன்பை விட கூடுதலாக இருந்தது. அடுத்த போட்டியிலும் கூட ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது. அந்தப் போட்டியில் சிஎஸ்கே சேஸிங் செய்த விதம் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
கிண்டல்
அடுத்து டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் அதே போல சொதப்பியது சிஎஸ்கே அணி. அந்தப் போட்டி நடந்த போது சமூக வலைதளங்களில் சிஎஸ்கே அணி கடுமையாக கிண்டல் செய்யபப்பட்டது. எப்போதும் சிஎஸ்கே அணிக்கு சாதகமாக பெரும் ரசிகர் கூட்டம் இணையத்தில் பதிவுகள் இட்டு கொண்டாடும். அது பெருமளவில் குறைந்தே இருந்தது.
ரசிகர்கள் குறைவு
இணையதளத்தில், ஸ்மார்ட்போன்களில் போட்டியைக் கண்ட ரசிகர்களின் எண்ணிக்கை கூட குறைந்த அளவிலேயே இருந்தது. இது தான் சிஎஸ்கே நிர்வாகத்துக்கு பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு என்ன காரணம்? இந்த தொடர் துவங்கும் முன்பிருந்தே இந்த சறுக்கல் தொடங்கி விட்டது என்பதே உண்மை.
ரெய்னா விலகல்
2020 ஐபிஎல் தொடரில் பங்கேற்க சிஎஸ்கே வீரர்கள் துபாய் வந்தனர். அப்போது சுரேஷ் ரெய்னா, சிஎஸ்கே நிர்வாகம் மற்றும் தோனியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இந்த சீசனில் இருந்து விலகினார். அந்த சம்பவம் சிஎஸ்கே ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு
எனினும், சமாதானம் ஏற்பட்டு இதே ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா மீண்டும் சிஎஸ்கே அணியில் இணைவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அது நடக்கவில்லை. கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா இல்லாமல் அணியை வழிநடத்த முடிவு செய்தார். அதைக் கண்டு ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.
சீனிவாசன் பேச்சு
மேலும், சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணியை விட்டு விலகி இந்தியா திரும்பிய போது, சிஎஸ்கே அணியின் உரிமையாளர் சீனிவாசன், ரெய்னாவை கடுமையாக தாக்கிப் பேசினார். அவர் எவ்வளவு பணத்தை இழக்கப் போகிறோம் என்பதை உணர்வார் என்றார்.
அந்த வார்த்தைகள்
சீனிவாசனின் அந்தப் பேச்சு சுரேஷ் ரெய்னா பணத்துக்கு ஆடுபவர் என்பதைப் போன்ற அர்த்தத்தில் இருந்தது. அதன் பின் சீனிவாசன் - ரெய்னா இருவரும் அப்பா - மகன் இடையே ஆன கோபம் போன்றது இது என கூறினாலும் அந்த வார்த்தைகள் ரசிகர்களின் மனதை விட்டு நீங்கவில்லை.
இதுதான் சிஎஸ்கே
அதன் பின், 2020 ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் வலுவான மும்பை இந்தியன்ஸ் அணியை சிஎஸ்கே அணி வீழ்த்திய போது "இதுதான் சிஎஸ்கே" என அதுவரை சோர்ந்து இருந்த ரசிகர்கள் கொண்டாடினர். ஆனால், அடுத்த இரண்டு போட்டிகளில் தோனியின் கேப்டன்சி, பேட்டிங், சிஎஸ்கே அணியின் ஒட்டுமொத்த செயல்பாடு மிக மோசமாக இருந்தது.
கேப்டன்சி சொதப்பல்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் சுழற் பந்துவீச்சாளர்கள் ஓவரில் சிக்ஸர்கள் அடித்துக் கொண்டிருந்த போது மீண்டும் சுழற் பந்துவீச்சாளர்களுக்கே ஓவர்கள் கொடுத்தார் தோனி. அந்தப் போட்டியில் 217 ரன்கள் என்ற இலக்கை சேஸிங் செய்த சிஎஸ்கே அணி மிக நிதானமாக ஆடியது.
தோற்றால் போதும்
ஒரு கட்டத்தில் வெற்றிக்காக ஆடாமல், இலக்கை நெருங்கி தோற்றால் போதும் என்ற முடிவில் ஆடியது. தோனி கடைசி ஓவர்களில் பவுண்டரி அடிக்க முயற்சி செய்யாமல் சிங்கிள் ரன்கள் எடுத்து அதிர்ச்சி அளித்தார். தோனி கடைசி ஓவரில் தோல்வி உறுதியான பின் அடித்த மூன்று சிக்ஸர்கள் சில ரசிகர்களுக்கு அதிருப்தியைத் தான் ஏற்படுத்தியது.
ஈர்ப்பை இழந்தனர்
அப்போதே சிஎஸ்கே ரசிகர்கள் சிஎஸ்கே மீதான ஈர்ப்பை இழந்தனர். வயதான வீரர்கள், தவறான சேஸிங் திட்டம், கேப்டன்சியிலும். பேட்டிங்கிலும் தடுமாறும் தோனி என சிஎஸ்கே அணி சரிவுப் பாதையில் சிஎஸ்கே இருப்பது தெள்ளத் தெளிவாக தெரிந்தது.
அதே தவறுகள்
இந்த நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 176 ரன்கள் என்ற இலக்கை துரத்தியது. மீண்டும் அதே மோசமான துவக்கம், நிதான ஆட்டம் என வெறுப்பேற்றியது சிஎஸ்கே. 10 ஓவர்களில் வெறும் 47 ரன்கள் எடுத்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தோனி திணறல்
இந்தப் போட்டியிலும் தோனி திணறல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிஎஸ்கே வீரர்கள் ஒருவர் கூட பெரிய இலக்கை சேஸிங்செய்ய வேண்டும் என்ற பதற்றமே இல்லாமல் இருந்தனர். இது ரசிகர்களை மேலும் அதிருப்தி அடைய வைத்தது. எப்போதும் சிஎஸ்கே அணியை மற்றவர்கள் கிண்டல் செய்யும் போது இணையத்தில் பதிலடி கொடுக்கும் தீவிர சிஎஸ்கே - தோனி ரசிகர்கள் கூட இந்த முறை அமைதி காத்தனர். பாதி போட்டியில் இணையத்தில் போட்டியை காணும் ரசிகர்கள் எண்ணிக்கை வேகமாக சரிந்தது.
ஆபத்து
13 ஆண்டுகளாக சிஎஸ்கே அணிக்கு இருக்கும் தீவிர ரசிகர்கள் குறையத் துவங்கி உள்ளனர் என்பதே உண்மை. இது ஆரம்பம் தான். இந்த தொடரில் சிஎஸ்கே அணி வெற்றிகளை குவிக்காமல் போனால் இந்த சீசனுடன் சிஎஸ்கே அணி தன் பெரிய ரசிகர் கூட்டத்தை இழக்கும். அடுத்த சீசனில் தோனி ஆடுவதும் சந்தேகம். அப்போது நிலைமை இன்னும் மோசமாகும்.