வீரர்கள் இழப்பு
சிஎஸ்கே அணி இந்த சீசன் துவக்கத்திலேயே சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் என இரண்டு வீரர்களை இழந்தது. முதல் போட்டியில் அம்பதி ரயுடுவின் அதிரடி ஆட்டத்தால் அந்த அணி வெற்றி பெற்றது. ஆனால், அடுத்த இரண்டு போட்டிகளில் அம்பதி ராயுடு ஆடவில்லை.
பேட்டிங் பலவீனம்
சிஎஸ்கே அணி ஆடிய கடைசி இரண்டு போட்டிகளிலும் பேட்டிங் பலவீனமாக இருப்பது வெளிப்படையாக தெரிந்தது. அதே சமயம், பந்துவீச்சும் சரியில்லை. தோனியால் முன்பு போல எதிரணியை தன் பவுலிங் மாற்றங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.
கூடுதல் பந்துவீச்சாளர்கள்
அதற்கு முக்கிய காரணம், இந்த ஐபிஎல் சீசனில் தோனி சரியாக ஐந்து பந்துவீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்தி வருவது தான். இதற்கு முன்னர் ஐபிஎல் போட்டிகளிலும், இந்திய அணிக்கு கேப்டனாக இருந்த போதும் கூட தோனி கூடுதல் பந்துவீச்சாளர்களை வைத்து இருப்பார்.
சூழ்நிலைக்கு ஏற்ப..
அதன் மூலம் ஆடுகளத்தில் அல்லது போட்டியின் சூழ்நிலையில் சுழற் பந்துவீச்சாளர் அல்லது வேகப் பந்துவீச்சாளரை மாற்றி மாற்றி பயன்படுத்துவார். வெறும் ஐந்து பந்துவீச்சாளர்களை வைத்துக் கொண்டு இப்படி செய்ய முடியாது.
ஆறு முழு நேர பந்துவீச்சாளர்கள்
அதனால் எப்போதும் சிஎஸ்கே அணியில் ஆறு முழு நேர பந்துவீச்சாளர்கள் இருப்பார்கள். ஆறு பந்துவீச்சாளர்கள் தேவை என்றால் அதிக ஆல் - ரவுண்டர்கள் அணியில் இடம் பெற வேண்டும். அதற்கேற்ப தான் தோனி அணியை தேர்வு செய்வார்.
எதிரணிகள்
ஆனால், இந்த சீசனில் ஜடேஜா, பியுஷ் சாவ்லா என இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களும், மூன்று வேகப் பந்துவீச்சாளர்களையும் தோனி பயன்படுத்தி வருகிறார். மத்திய ஓவர்களில் சுழற் பந்துவீச்சாளர்கள் வீசும் போது எதிரணி வீரர்கள் அதை எளிதாக அணுகி ரன் குவித்து வருகிறார்கள்.
தோனி திணறுகிறார்
வேகப் பந்துவீச்சாளர்கள் கடைசி ஓவர்களில் தேவை என்பதால் பந்துவீச்சை மாற்ற முடியாமல் திணறி வருகிறார் தோனி. இந்த விஷயத்தை சுட்டிக் காட்டி உள்ள முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சிஎஸ்கே அணியின் தவறுகளை பட்டியலிட்டார்.
தோனி இதை விரும்ப மாட்டார்
"என் நினைவுக்கு தெரிந்து கேப்டனாக தோனி ஐந்து பந்துவீச்சாளர்களை மட்டும் பயன்படுத்தி வருகிறார். அவர் எப்போதும் வெறும் ஐந்து பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க விரும்ப மாட்டார். ஆனால், இப்போது அப்படி செய்து வருகிறார்" என்றார் சோப்ரா.
பெரிய சிக்கல்
மேலும், "அவர் தன் பேட்டிங் குறித்து கவலையில் இருக்கிறார். ராயுடு இல்லாதது பெரிய சிக்கல். தோனி தன் பேட்டிங் மீது 100 சதவிகிதம் நம்பிக்கையுடன் இல்லை. ருதுராஜ் உள்ளே வந்துள்ளார். முரளி விஜய் ரன் குவிக்கவில்லை. அதனால், தோனி ஆறு பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க யோசிக்கிறார்" என்றார்.
ஜடேஜா நிலை
"இந்த சீசனில் ஜடேஜா முழுமையாக 4 ஓவர்கள் வீசி ஒவ்வொரு முறையும் 40 ரன்களுக்கு மேல் கொடுத்துள்ளார். அவ்வளவு ரன்கள் வாரி இறைத்தாலும் அவருக்கு முழுமையாக ஓவர் கொடுக்கப்படுகிறது. ஏனெனில், அணியில் ஐந்து பந்துவீச்சாளர்கள் மட்டுமே உள்ளனர். அது தோனியிடம் எப்போதும் நடக்காது. ஆனால், இப்போது நடக்கிறது" என்றார் ஆகாஷ் சோப்ரா.