லீக் போட்டி
2020 ஐபிஎல் தொடரில் 7வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சென்னை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.
கேட்ச்
ப்ரித்வி ஷா முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் கொடுத்த கேட்ச்சை தோனி பிடித்தும் அவுட் கேட்கவில்லை. அதை பயன்படுத்திய ப்ரித்வி ஷா அபாரமாக ஆடி ரன் குவித்தார். தவான் முதலில் தடுமாறினாலும் பின் அவரும் ரன் குவிப்பில் இணைந்து கொண்டார்.
அந்த பந்து
இவர்களை பிரிக்க முடியாமல் தோனி தவித்து வந்தார். அப்போது ஆறாவது ஓவரை வீசினார் தீபக் சாஹர். இரண்டாவது பந்தை தவான் சந்தித்தார். தவான் பேக்வேர்டு பாயின்ட் திசையில் பந்தை அடித்தார். முரளி விஜய் பந்தை பிடிக்க சென்றார்.
வெளிச்சம்
முரளி விஜய் பந்தை தவறவிட்டார். இதை அடுத்து ஒரு ரன் ஓட வேண்டிய இடத்தில் இரண்டு ரன்கள் ஓடியது தவான் - ப்ரித்வி ஷா ஜோடி. தவறு செய்த முரளி விஜய் அதிக மின்சார வெளிச்சத்தால் தன்னால் பந்தை பார்க்க முடியவில்லை என்றார்.
தோனி கடும் கோபம்
அதைக் கண்ட தோனி கடும் கோபம் கொண்டார். முரளி விஜய்யை உக்கிரமாக பார்த்தார். இந்தசம்பவம் போட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் ப்ரித்வி ஷா - தவான் தொடர்ந்து அதிரடி ஆட்டம் ஆடி முதல் விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்தனர்.
டெல்லி கேபிடல்ஸ் ரன் குவிப்பு
டெல்லி கேபிடல்ஸ் அணி இந்தப் போட்டியில் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது. முதல் 10 ஓவர்களில் 88 ரன்கள் சேர்த்த அந்த அணி அடுத்த 10 ஓவர்களில் 87 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இது மட்டுமே சிஎஸ்கே அணிக்கு கிடைத்த ஒரே வாய்ப்பாக அமைந்தது.
பீல்டிங்
சிஎஸ்கே அணியின் பீல்டிங் மோசமாக இருப்பதாக முதல் போட்டியிலேயே விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில், டெல்லி அணிக்கு எதிரான போட்டியிலும் அதே நிலை தொடர்ந்து வருகிறது. தோனி இதை எப்படி சமாளிக்கப் போகிறார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
முரளி விஜய்
பீல்டிங்கில் சொதப்பிய முரளி விஜய் பேட்டிங்கிலும் சொதப்பினார். தொடர்ந்து மூன்று போட்டியிலும் அவர் சரியாக ரன் குவிக்கவில்லை. இந்தப் போட்டியில் அவர் 15 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த போட்டியில் முரளி விஜய்க்கு வாய்ப்பு கிடைப்பது கடினம்.