சிஎஸ்கே நிலை
சிஎஸ்கே அணி இந்த சீசனில் தன் முதல் போட்டியில் வலுவான மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. அப்போது சிஎஸ்கே மீது நம்பிக்கை இருந்தாலும், அதன் பின் இரண்டு போட்டிகளில் சேஸிங்கில் மோசமாக ஆடி இரண்டு தோல்விகளை சந்தித்துள்ளது சிஎஸ்கே.
முக்கிய வீரர்கள் இல்லை
அந்த அணியில் சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் போன்ற வீரர்கள் தொடர் துவங்கும் முன்பே விலகினர். முக்கிய ஆல் -ரவுண்டர் டிவைன் பிராவோ காயம் காரணமாக பங்கேற்கவில்லை. முதல் போட்டியில் சிஎஸ்கே வெற்றிக்கு முக்கிய காரணமான அம்பதி ராயுடுவும் காயம் காரணமாக அடுத்த இரண்டு போட்டிகளில் ஆடவில்லை.
ஜடேஜா மீது நம்பிக்கை
இந்த நிலையில், அனுபவ ஆல் - ரவுண்டராக மாறி உள்ள ஜடேஜா மீது தோனி நம்பிக்கை வைத்திருந்தார். வழக்கம் போல பந்துவீச்சில் கலக்குவது மட்டுமின்றி, பேட்டிங்கிலும் இந்த சீசனில் ஜடேஜா கலக்கலாக ஆடுவார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.
பந்துவீச்சு
ஆனால், அடிப்படை விஷயத்திலேயே சறுக்கினார் ஜடேஜா. எப்போதும் கட்டுக் கோப்பாக பந்து வீசி விக்கெட் வேட்டை நடத்தும் ஜடேஜா இந்த சீசனில் ரன்களை வாரி வழங்கி வருகிறார். மூன்று போட்டிகளில் 2 விக்கெட் மட்டுமே வீழ்த்தி உள்ளார்.
10 ரன்களுக்கும் மேல்..
மூன்று போட்டிகளிலும் ஜடேஜா ஓவருக்கு 10 ரன்களுக்கும் மேல் ரன் கொடுத்துள்ளார். மூன்று போட்டிகளிலும் தலா 4 ஓவர்கள் வீசி உள்ள அவர் 42, 40, 44 ரன்கள் கொடுத்துள்ளார். இதன் எகானமி ரன் ரேட் 10.5 ஆகும். இது கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது.
பேட்டிங்கிலும் தாக்கம் இல்லை
மறுபுறம் பேட்டிங்கிலும் ஜடேஜா பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மூன்று போட்டிகளில் 10, 1*, 12 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் ஜடேஜா. இதில் முதல் போட்டியில் விக்கெட் போனாலும் அணிக்காக அதிரடி ஆட்டம் ஆடி 5 பந்துகளில் 10 ரன்கள் எடுத்தார்.
தோனி ஏமாற்றம்
ஜடேஜா எதிர்பார்த்தபடி பேட்டிங்கில் ஆடவில்லை என்பதை விட அவரது அடிப்படை பலமான பந்துவீச்சிலும் அவர் சொதப்புவதை தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கேப்டன் தோனி இந்த விஷயத்தில் ஏமாற்றமாக இருந்தாலும், எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார்.
தொடர்ந்து வாய்ப்பு
ஜடேஜாவுக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும், சிஎஸ்கே அணி தற்போது இருக்கும் நிலையில் ஜடேஜாவும் மோசமாக ஆடினால், அணிக்கு கை கொடுக்கவில்லை என்றால் அது பல வகைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.