அந்தப் போட்டி
சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் இடையே ஆன ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி அதிரடியாக ஆடி 175 ரன்கள் குவித்தது. அரைசதம் அடித்த ப்ரித்வி ஷா இரண்டாவது பந்திலேயே கொடுத்த கேட்ச்சை பிடித்து விட்டு தோனி அவுட் கேட்கவில்லை.
சிஎஸ்கே அணியின் பவுலிங் சொதப்பல்
அது ஒருபுறம் பாதிப்பை ஏற்படுத்த, மறுபுறம் சுழற் பந்துவீச்சாளர்கள் ஜடேஜா, பியுஷ் சாவ்லா அதிக ரன்கள் விட்டுக் கொடுத்தனர். தீபக் சாஹர் முன்பு போல கட்டுக்கோப்பாக பந்து வீசவில்லை. சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு சுமாராகவே அமைந்தது.
ஆமை வேக பேட்டிங்
சேஸிங்கில் சிஎஸ்கே அணி அமை வேகத்தில் செயல்பட்டது. துவக்க வீரர்கள் ஷேன் வாட்சன், முரளி விஜய் எப்போதும் நிதானமாகவே துவக்கம் அளித்து வருகின்றனர். 10 ஓவர்களில் சிஎஸ்கே அணி 47 ரன்கள் மட்டுமே எடுத்து டெஸ்ட் போட்டி போல ஆடி இருந்தது.
சேவாக் விளாசல்
இந்த நிலையில், சிஎஸ்கே அணியை கிண்டல் செய்துள்ளார் சேவாக். டெல்லி அணியை டெல்லி மெட்ரோ ரயில் என்றும், சென்னை அணியை சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் என்று கூறி இரு அணிகளையும் ஒப்பிட்டார். இந்த மெட்ரோ இளமையானது. சிஎஸ்கேவின் டாடி ஆர்மியின் விசில்களை ஊதித் தள்ளி விட்டது என கூறினார்.
டெஸ்ட் போட்டி ஆடினால்..
டி20 போட்டியில், பெர்த் போன்ற பச்சை பசேல் என்ற விக்கெட்டில் நீங்கள் டெஸ்ட் போட்டி ஆடினால் நான் சூரஜ் பார்ஜாதியா படத்தை பார்ப்பேன். அந்த அளவுக்கு மெதுவாக டெஸ்ட் போட்டி போல இருந்தது சிஎஸ்கே அணியின் ஆட்டம் என்றார் சேவாக்.
பழைய எஞ்சின்
சிஎஸ்கே அணியின் துவக்கம் மோசமாக இல்லை. ஆனால், இரண்டாவது கியரிலேயே இருந்தது. முரளி விஜய் தான் டி20யில் ஆடுகிறோம் என்பதையே நம்பவில்லை. ஷேன் வாட்சன் பழைய எஞ்சின் போல துவக்கத்தில் தடுமாறுகிறார். அதன் பின் விரைவில் நின்றும் போய் விடுகிறார் என்றார்.
புல்லட் ரயில் வந்துவிடும்
பாப் டுபிளெசிஸ் தன் அணி வீரர்களுக்கு நாம் டி20 தான் ஆடுகிறோம், டெஸ்ட் போட்டி அல்ல என சொல்ல முயற்சி செய்கிறார். தோனி நான்காம் வரிசையில் பேட்டிங் செய்யும் முடிவை எடுக்கும் முன் இந்தியாவுக்கு புல்லட் ரயில் வந்துவிடும் என கலாய்த்தார் சேவாக்.
கேட்காமல் கிடைக்காது
சிஎஸ்கே ப்ரித்வி ஷா விக்கெட்டை எடுத்த பின்னரும் யாரும் அவுட் கேட்கவில்லை. காலியான மைதானத்தில் ஆடும் போதும் யாருமே பந்து எட்ஜ் ஆனதை கேட்கவில்லை. இந்த காலத்தில் எதுவுமே கேட்காமல் கிடைக்காது எனவும் சிஎஸ்கே அணியை கேலி செய்தார் சேவாக்.