வாய்ப்பை இழந்தது
சிஎஸ்கே அணியின் வெற்றியால் பஞ்சாப் அணி பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்தது. இந்தப் போட்டிக்கு முன் பஞ்சாப் அணி 12 புள்ளிகளுடன் இருந்தது. சிஎஸ்கே அணியை வீழ்த்தினால் 14 புள்ளிகள் பெற்று நெட் ரன் ரேட் அடிப்படையில் எளிதாக பிளே-ஆஃப் முன்னேறும் நிலை இருந்தது.
டாஸ் தோல்வி
இந்த நிலையில், சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி டாஸில் தோல்வி அடைந்தது. சிஎஸ்கே முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து 180, 190 ரன்கள் குவித்தால் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது.
பஞ்சாப் பேட்டிங்
இந்தப் போட்டியில் காயத்தில் இருந்த மயங்க் அகர்வாலும் அணிக்கு திரும்பினார். அவர் அதிரடியாக 26 ரன்கள் சேர்த்தார். ராகுல் வழக்கம் போல நிதான ஆட்டம் ஆடி 29 ரன்கள் எடுத்தார். தீபக் ஹூடா 30 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்தார்.
சிஎஸ்கே வெற்றி
பஞ்சாப் அணி 153 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிஎஸ்கே அணியின் ருதுராஜ் 62*, பாப் டுபிளெசிஸ் 48 ரன்கள் குவிக்கவே அந்த அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி தன் பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்தது.
மறந்து விடுங்கள்
இது குறித்து பேசிய பஞ்சாப் அணி கேப்டன் கேஎல் ராகுல், நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை. 180-190 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். ஆனால், அழுத்தத்தில் சிக்கி பெரிய ஸ்கோர் எடுக்காமல் விட்டுவிட்டோம். இந்த ஆண்டை மறந்து விடுங்கள். அடுத்த ஆண்டு சிறப்பாக ஆடுவோம் என்றார்.
தவறு
தற்போது திரும்பிப் பார்த்தால் பல போட்டிகளை நாங்கள் வெற்றிக்கு அருகே கொண்டு வந்தோம். ஆனால், இலக்கை தாண்டவில்லை. எங்களை நாங்களே தான் தவறை ஒப்புக் கொள்ள வேண்டும் என புலம்பினார் பஞ்சாப் அணி கேப்டன் ராகுல்.