சிஎஸ்கே அணி நிலை
2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மோசமான நிலையில் ஆடி வருகிறது. வயதான வீரர்கள், திட்டமே இல்லாத ஆட்டம் என மோசமாக ஆடிய சிஎஸ்கே அணி 10 போட்டிகளில் 7 தோல்விகளை அடைந்தது. இனியாவது செயல்படாத வீரர்களை தோனி நீக்குவாரா? என்ற கேள்வி எழுந்தது.
மூன்று வீரர்கள் நீக்கம்
இந்த நிலையில், அவர் சிஎஸ்கே அணியில் மூன்று வீரர்களை நீக்கினார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே டாஸில் தோல்வி அடைந்தது. அப்போது தோனி அணி மாற்றத்தை அறிவித்து ரசிகர்களுக்கு நல்ல செய்தி கூறினார்.
ஷேன் வாட்சன்
துவக்க வீரர் ஷேன் வாட்சன் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் கடந்த இரண்டு சீசன்களில் சிஎஸ்கே அணிக்காக முக்கிய போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். ஆனால், இந்த சீசனில் ஒரீரு போட்டிகள் தவிர மற்ற போட்டிகளில் மோசமாகவே ஆடினார்.
பியுஷ் சாவ்லா
அடுத்து அணியின் முக்கிய சுழற் பந்துவீச்சாளர் பியுஷ் சாவ்லா அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் அதிக ரன்களை வாரி இறைத்து வந்தார். அவரால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் அவரை நீக்கினார் தோனி.
கேதர் ஜாதவ்
பலராலும் மிக மோசமாக விமர்சிக்கப்பட்ட கேதர் ஜாதவ்வை அணியில் இருந்து நீக்கி இருக்கிறார் தோனி. ஜாதவ் ஒரு போட்டியில் கூட ரன் குவிக்கவில்லை. மேலும், அவரது நிதான ஆட்டத்தால் சிஎஸ்கே அணி சில போட்டிகளில் தோல்வி அடைந்தது.
இரண்டு இளம் வீரர்கள்
இந்த மூன்று வீரர்களுக்கும் பதில் சிஎஸ்கே அணியில் இரண்டு இளம் வீரர்களுக்கும், மூத்த வீரர் இம்ரான் தாஹிருக்கும் அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஜெகதீசன், ருதுராஜ் கெயிக்வாட் ஆகியோர் ஒரீரு போட்டிகளில் ஆடிய பின் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. தற்போது அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ரொம்ப லேட்
தோனியின் இந்த முடிவு மிகவும் தாமதமாக எடுக்கப்பட்ட முடிவு. ஆனாலும், ரசிகர்கள் இந்த முடிவை வரவேற்றனர். இந்த முடிவுகள் அடுத்து வரும் போட்டிகளில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவாவது உதவும் என விமர்சகர்கள் கூறினர்.