ஐபிஎல் தொடர்
சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே 2020 ஐபிஎல் தொடரின் முதல் லீக் போட்டி அபுதாபியில் நடந்தது. நீண்ட தாமதத்திற்குப் பின் ஐபிஎல் தொடர் துவங்கியதால் இந்தப் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு மற்றும் வரவேற்பு இருந்தது.
அனுபவ வீரர்கள் விலகல்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் பங்கேற்கவில்லை. அவர்கள் இருவரும் 2020 ஐபிஎல் தொடரில் இருந்தே விலகி உள்ளனர். மும்பை அணியில் லசித் மலிங்கா 2020 ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார்.
டாஸ் வெற்றி
முதல் போட்டியில் சிஎஸ்கே அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. மைதானத்தில் இரவு நேரத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்பதால் கேப்டன் தோனி அந்த முடிவை எடுத்தார். மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது.
அதிரடி பேட்டிங்
மும்பை அணிக்கு ரோஹித் சர்மா, க்வின்டன் டி காக் துவக்கம் அளித்தனர். அந்த அணி அதிரடியாக ரன் குவித்தது. இடையே விக்கெட்களை இழந்த போதும் ரன் குவிக்கும் வேகம் குறையவில்லை. டி காக் 33, திவாரி 42 ரன்கள் எடுத்தனர். ரோஹித் 12, சூர்யகுமார் 17, பாண்டியா 14, பொல்லார்டு 18 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
விக்கெட் வேட்டை
சிஎஸ்கே அணி 5வது ஓவர் முதல் விக்கெட் வேட்டையைத் துவங்கியது. தீபக் சாஹர் 2, சாம் கர்ரன் 1, லுங்கி நிகிடி 3, பியுஷ் சாவ்லா 1, ஜடேஜா 2 விக்கெட் வீழ்த்தினர். சிஎஸ்கே அணி 9 விக்கெட்களை வீழ்த்தியது. ஜடேஜா 4 ஓவர்களில் 42 ரன்களை வாரி இறைத்தார்.
பெரிய ஸ்கோர் எடுத்த மும்பை
மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் குவித்தது. சவாலான இலக்கை நோக்கி ஆடத் துவங்கிய சிஎஸ்கே அணிக்கு ஷேன் வாட்சன், முரளி விஜய் மோசமான துவக்கம் அளித்தனர். விஜய் 1, வாட்சன் 4 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
நிதான ஆட்டம்
அடுத்து வந்த பாப் டுபிளெசிஸ், அம்பதி ராயுடு சிஎஸ்கே அணியை மீட்டனர். இருவரும் நிதான ஆட்டம் ஆடி பயமுறுத்தினாலும் பின்னர் வேகம் எடுத்தனர். ராயுடு அதிரடி ஆட்டம் ஆடி 48 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார். பாப் டுபிளெசிஸ் அரைசதம் கடந்தார்.
தோனி வரவில்லை
எனினும், ஓவருக்கு 10 ரன்கள் எடுத்தால் தான் வெற்றி பெற முடியும் என்ற நிலையிலேயே இருந்தது சிஎஸ்கே. கடைசி நான்கு ஓவர்களில் விக்கெட் வீழ்ச்சி ஏற்பட ஐந்தாம் வரிசையில் தோனிக்கு பதில் ஜடேஜாவும், அதன் பின் சாம் கர்ரனும் இர இறங்கினர்.
அதிரடி
ஜடேஜா 5 பந்துகளில் 10 ரன்களும், கர்ரன் 6 பந்துகளில் 18 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து தோனி இறங்கினார். கடைசி ஓவரில் சிஎஸ்கே வெற்றிக்கு 5 ரன்கள் தேவை என்ற நிலையில், டுபிளெசிஸ் முதல் பந்திலேயே ஃபோர் அடித்தார்.
சிஎஸ்கே வெற்றி
அடுத்த பந்திலேயே அவர் 1 ரன் எடுக்க சிஎஸ்கே அணி 19.2 ஓவரில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிஎஸ்கே அணியை வயதான அணி என கிண்டல் செய்த அனைவருக்கும் சரியான பதிலடி கொடுத்தது சிஎஸ்கே அணி.