அபுதாபியில் பயிற்சி
இந்த ஐபிஎல் சீசனில் விளையாடுவதற்காக அபுதாபியில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள். இதுவரை இருமுறை ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ள இந்த அணி தற்போது தன்னுடைய 3வது கோப்பையை கைப்பற்ற காய் நகர்த்தி வருகிறது. இதற்கென தன்னுடைய அணி வீரர்களை சிறப்பாக தயார் செய்து வருகிறது.
ரஸ்ஸல் குறித்து ரிங்கு சிங் பாராட்டு
அணியில் மூத்த வீரர்கள், இளம் வீரர்கள் என கலந்துகட்டி உள்ள நிலையில், இளம் வீரர்களுக்கு மூத்த வீரர்களின் அனுபவப் பகிர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அணியின் இணையதளத்திற்காக பேசிய அணியின் இளம் வீரர் ரிங்கு சிங், கடந்த 2014 முதல் அணிக்காக ஆடிவரும் ஆண்ட்ரே ரஸ்ஸல் தற்போதைய சூழலில் உலகின் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
அவர்தான் சிறப்பான வீரர்
ரஸ்ஸலை போல பந்தை அடித்து ஆடுவதற்கு யாராலும் முடியாது என்றும் அத்தகைய பலத்தை அவர் கொண்டுள்ளதாகவும் ரிங்கு சிங் மேலும் கூறினார். கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடிய ரஸ்ஸல், 14 போட்டிகளில் 510 ரன்களை குவித்தார். இதன் ஸ்டிரைக் ரேட் 204.81. மேலும் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியில் அதிகமாக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
போட்டியிட எந்த வீரரும் இல்லை
அவர் அடித்து ஆடும் சிக்ஸ்கள் மிகப்பெரியவை என்றும் அவருடன் போட்டி போடுவதற்கு எந்த வீரரும் இல்லை என்றும் ரிங்கு மேலும் கூறினார். கடந்த 2018 முதல் அணிக்காக ஆடிவரும் ரிங்கு சிங், முதலில் ஐபிஎல் போட்டிகள் பிறகு இந்திய ஏ அணி அடுத்ததாக இந்திய அணி என்று படிப்படியாக தான் முன்னேற விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
ரிங்குவை அடித்த தந்தை
தான் பள்ளி காலத்தில் கிரிக்கெட் விளையாடிய போது, தன்னுடைய தந்தை தன்னை படிப்பில் கவனம் செலுத்த வலியுறுத்தி அடிப்பார் என்றும் ஆனால் கடந்த 2012ல் நடைபெற்ற பள்ளி அளவிலான போட்டியில் தான் 354 ரன்களை குவித்து 8 விக்கெட்டுகளையும் விழ்த்தி தொடர் நாயகனாக தேர்வானதாகவும் கூறினார். பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட அணிகள் பங்கேற்ற அந்த தொடரில் தனக்கு பைக் பரிசாக கிடைத்ததாகவும் அதன்பிறகு தன்னுடைய தந்தை தன்னை அடிக்கவில்லை என்றும் கூறினார்.