தோனி டாஸ் வென்றார்
2020 ஐபிஎல் தொடரின் 34வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி டாஸ் வென்றார். முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதால் டாஸ் வென்ற உடன் பேட்டிங் தேர்வு செய்தார்.
சாம் கர்ரன் டக் அவுட்
கடந்த போட்டியைப் போல சாம் கர்ரன் துவக்க வீரராக களமிறங்கினார். ஆனால், முதல் ஓவரின் மூன்றாவது பந்தில் ரன் ஏதும் எடுக்காத நிலையில் சாம் கர்ரன் ஆட்டமிழந்தார். அடுத்ததாக ஷேன் வாட்சன் - பாப் டுபிளெசிஸ் ஜோசி சேர்ந்து அணியை மீட்டனர்.
டுபிளெசிஸ் அரைசதம்
பாப் டுபிளெசிஸ் தன் சிறப்பான பார்மை தொடர்ந்தார். நிதான ஆட்டம் ஆடினாலும் அரைசதம் கடந்து 47 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்தார் டுபிளெசிஸ். ஷேன் வாட்சன் 36 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த அம்பதி ராயுடு அதிரடி ஆட்டம் ஆடினார்.
தோனி ஏமாற்றம்
தோனி கடைசி ஓவர்களில் அதிரடி ஆட்டம் ஆடுவார் என காத்திருந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். அவர் 5 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்து நடையைக் கட்டினார். கடைசி 4 ஓவர்களில் சிஎஸ்கே என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி எழுந்தது.
ராயுடு - ஜடேஜா அதிரடி
அப்போது அம்பதி ராயுடு - ஜடேஜா ஜோடி சேர்ந்தனர். ஜடேஜா கடந்த சில போட்டிகளாகவே சிக்ஸர் பறக்க விட்டு வருகிறார். அதை தொடர்ந்த அவர் இந்தப் போட்டியிலும் 4 சிக்ஸ் அடித்தார். ராயுடுவும் தன் பங்கிற்கு 4 சிக்ஸ் அடித்தார்.
ரன் குவிப்பு
17வது ஓவரில் 12 ரன்கள், 18வது ஓவரில் 13 ரன்கள், 19வது ஓவரில் 16 ரன்கள், 20 ஓவரிலும் 16 ரன்கள் குவித்தது ராயுடு - ஜடேஜா ஜோடி. இந்த ஜோடி 21 பந்துகளில் 50 ரன்களை சேர்த்தது. ஜடேஜா 13 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்து இருந்தார்.
சிஎஸ்கே ஸ்கோர்
அம்பதி ராயுடு 25 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 179 ரன்கள் சேர்த்தது. டெல்லி அணிக்கு 180 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது சிஎஸ்கே அணி.