சிஎஸ்கே அணி தோல்விகள்
சிஎஸ்கே அணி 2020 ஐபிஎல் தொடரில் முதல் ஏழு போட்டிகளில் ஐந்து தோல்விகளை சந்தித்தது. அதற்கு முக்கிய காரணம் பேட்டிங் வரிசையில் மிடில் ஆர்டர் பலவீனமாக இருந்தது தான். அதில் கேதர் ஜாதவ் தான் மிக மோசமாக ஆடி வந்தார்.
ஜாதவ் செய்த சொதப்பல்
முதல் ஆறு போட்டிகளில் நான்கு முறை பேட்டிங் ஆட வாய்ப்பு பெற்ற கேதர் ஜாதவ் அதில் சொற்ப ரன்களே எடுத்தார். ஒவ்வொரு முறையும் அவர் அதிக பந்துகளை வீணடித்து வந்தார். கொல்கத்தா போட்டியில் சேஸிங்கின் போது இலக்கை நெருங்கிய நிலையில், கேதர் ஜாதவ் பந்துகளை வீணடித்து ஆடினார்.
ரசிகர்கள் கோபம்
அந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தது. அப்போது ரசிகர்கள் கேதர் ஜாதவ் மீது கடும் கோபம் கொண்டனர். அவரை அணியை விட்டு நீக்கியே ஆக வேண்டும் என்றனர்.
மாறிய அணி
இதை அடுத்து அணியில் இருந்து ஜாதவ்வை நீக்கினார் தோனி. அவருக்கு பதில் அணியில் ஜெகதீசன் சேர்க்கப்பட்டார். ஒரு போட்டியில் அவர் நிதான ஆட்டம் ஆடி 30 ரன்கள் சேர்த்தார். அடுத்த போட்டியில் அவரை நீக்கி விட்டு சுழற் பந்துவீச்சாளர் பியுஷ் சாவ்லாவுக்கு அணியில் இடம் அளித்தார் தோனி.
மீண்டும் சேர்த்த தோனி
இனி கேதர் ஜாதவ்வுக்கு சிஎஸ்கே அணியில் வாய்ப்பு கிடைக்காது என கருதப்பட்ட நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான 34வது லீக் போட்டியில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு அளித்தார் தோனி. இது பெரும் அதிர்ச்சி முடிவாக பார்க்கப்பட்டது.
எந்த வேலையும் இல்லை
கேதர் ஏற்கனவே ஆடிய ஆறு போட்டிகளிலும் பேட்டிங் வரிசையில் பெரிதாக ரன் குவிக்கவில்லை, அவர் பகுதி நேர சுழற் பந்துவீச்சாளர் என்றாலும் தோனி அவருக்கு பந்து வீச வாய்ப்பு அளிப்பதில்லை. டெல்லி போட்டியில் 4 விக்கெட் வீழ்ந்த போதும் அவர் பேட்டிங் செய்ய வரவில்லை. ஜடேஜா ஆறாவது பேட்ஸ்மேன் ஆக ஆடினார்.
கடும் விமர்சனம்
எந்த வகையிலும் அணிக்கு பலன் அளிக்காத கேதர் ஜாதவ்வை ஏன் கேப்டன் தோனி தொடர்ந்து அணியில் வாய்ப்பு அளித்து வருகிறார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஜாதவ் மற்றும் தோனியை விளாசி வருகின்றனர்.
சிஎஸ்கே ஸ்கோர்
ஜாதவ் பேட்டிங் ஆடாத நிலையில், சிஎஸ்கே அணி கடைசி 4 ஓவர்களில் அதிரடியாக ரன் குவித்து 179 ரன்கள் குவித்தது. பாப் டுபிளெசிஸ் 58 ரன்கள் குவித்தார். அம்பதி ராயுடு 45, ஜடேஜா 13 பந்துகளில் 33 ரன்கள் குவித்தனர்.