தீபக் சாஹர்
தீபக் சாஹர் கடந்த 2018 மற்றும் 2019 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளராக இருந்தார். அவர் இல்லாமல் சிஎஸ்கே அணி இல்லை என கூறும் அளவுக்கு அணியின் முதன்மை வேகப் பந்துவீச்சாளராக பவர்பிளே ஓவர்களில் ஆதிக்கம் செலுத்தி வந்தார்.
கொரோனா பாதிப்பு
அவருக்கு 2020 ஐபிஎல் தொடருக்கு முன் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இரண்டு வாரம் குவாரன்டைனில் இருந்தார். அவருக்கு பெரிய அறிகுறிகள் ஏதும் ஏற்படவில்லை. விரைவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டார்.
பயிற்சி இல்லை
பாதிப்பில் இருந்து மீண்ட அவரால் ஐபிஎல் தொடருக்கு முன் போதிய பயிற்சி பெற முடியவில்லை. அப்படி இருந்தும் அவர் முதல் போட்டியில் இருந்தே சிஎஸ்கே அணியில் தொடர்ந்து இடம் பெற்று வருகிறார். முதல் ஓவர் துவங்கி பவர்பிளே ஓவர்களில் அவர் பந்து வீசி வருகிறார்.
பவர்பிளே ஓவர்கள்
ஆனால், கடந்த ஆண்டுகளைப் போல அவரால் பவர்பிளே ஓவர்களில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. அவர் விக்கெட் வீழ்த்த திணறினார், சில போட்டிகளில் மட்டுமே பவர்பிளே ஓவர்களில் விக்கெட் வீழ்த்தினார். மேலும், ரன்களையும் வாரி இறைத்து வந்தார்.
மூன்று போட்டிகளில் விக்கெட் இல்லை
தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் பவர்பிளே ஓவரில் விக்கெட் வீழ்த்தவில்லை. கடந்த 2018இல் இருந்து தீபக் சாஹர் தொடர்ந்து மூன்று போட்டிகளில் பவர்பிளேவில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்ததே இல்லை.
மோசமான நிலை
ஆனால் தற்போது அவர் அந்த மோசமான நிலையை அடைந்துள்ளார். மும்பை போட்டியில் 3 ஓவர்களில் விக்கெட் ஏதுமின்றி 30 ரன்கள் கொடுத்தார். பெங்களூர் போட்டியில் 2 ஓவர்களில் 17 ரன்கள் கொடுத்தார். அதிலும் விக்கெட் வீழ்த்தவில்லை.
சிஎஸ்கே தோல்விக்கு காரணம்
கொல்கத்தா போட்டியில் பவர்பிளேவில் 2 ஓவர்கள் வீசி 20 ரன்கள் கொடுத்தார். இந்தப் போட்டியிலும் அவர் விக்கெட் வீழ்த்தவில்லை. அவரது மோசமான செயல்பாடுகளும் சிஎஸ்கே அணி இந்த சீசனில் பிளே-ஆஃப் வாய்ப்பை தவறவிட ஒரு காரணம்.