கோப்பையை கைப்பற்ற அணிகள் தீவிரம்
வரும் மாதம் 19ம் தேதி யூஏஇயின் துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா போன்ற இடங்களில் துவங்கி ஐபிஎல் 2020 சீசன் நடைபெறவுள்ளது. இதையடுத்து தற்போது துபாயில் 8 அணிகளை சேர்ந்த வீரர்களும் குவாரன்டைனில் உள்ளனர். வழக்கமாக இல்லாமல் இந்த ஆண்டு யூஏஇயில் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், கோப்பையை கைப்பற்ற அனைத்து அணிகளும் மிகவும் தீவிரமாக உள்ளன.
டெல்லி கேபிடல்ஸ் அதிரடி
ஒவ்வொரு அணியிலும் வீரர்களுக்கு பயிற்சி உள்ளிட்ட விஷயங்கள் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் டெல்லி கேபிடல்சின் முக்கிய வீரரான இங்கிலாந்தின் ஜேசன் ராய்க்கு பதிலாக அணியில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் டேனியல் சாம்ஸ் இணைக்கப்பட்டுள்ளார். சொந்த காரணங்களால் ஜேசன் ராய் இந்த சீசனில் பங்கேற்க முடியாத நிலையில் தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அணியில் இணைவது குறித்து மகிழ்ச்சி
இதுகுறித்து டெல்லி கேபிடல்ஸ் அணி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. புதிய வரவை வரவேற்க தாங்கள் மிகவும் உற்சாகத்துடன் காத்திருப்பதாகவும் கூறியுள்ளது. இதனிடையே ஐபிஎல் தொடரில் இணைவது குறித்து இடது கை வேகப்பந்து வீச்சாளரான டேனியல் சாம்ஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
டெல்லி கேபிடல்சுக்கு சாம்ஸ் நன்றி
ஐபிஎல் போன்ற பெரிய தொடரில் இணைவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஒவ்வொரு ஆண்டும் அந்த தொடரை தாங்கள் மிகவும் நெருக்கமாக கண்காணிப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். இந்த ஆண்டு சீசனில் தன்னை இணைத்துக் கொண்ட டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்கு தான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.