இரண்டு அணி
இந்த நிலையில் ஐபிஎல் 2020 தொடரில் சாம்பியன் ஆக அதிக வாய்ப்பு இருக்கும் இரண்டு அணிகள் எது என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கணிப்புகளை வெளியிட்டு உள்ளனர். அதில் முதல் அணி மும்பை. கடந்த சீசனை போல இந்த சீசனிலும் மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் வலிமையாக இருக்கிறது. சிறந்த கேப்டன்.. வலுவான பேட்டிங் ஆர்டர்.. சிறப்பான பவுலிங் என்று மும்பை இந்தியன்ஸ் கலக்கி வருகிறது.
கலக்கல்
இதனால் கிட்டத்தட்ட மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் செல்வது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. மும்பை அணி இந்த முறை பைனல்ஸ் செல்லவும் அதிகம் வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் இன்னொரு இளம் டீம் இந்த ஐபிஎல் சீசனில் பைனல்ஸ் செல்ல அதிக வாய்ப்பு உள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க இளம் வீரர்களை கொண்டு இருக்கும் டெல்லி அணிதான் அது. டெல்லி இந்த முறை கண்டிப்பாக பிளே ஆப் செல்லும் என்று கூறுகிறார்கள்.
பிளே ஆப்
அதேபோல் டெல்லி பைனல்ஸ் செல்லவும் அதிக வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது. 6 போட்டிகளில் ஆடி உள்ள டெல்லி 5 போட்டிகளில் வென்றுள்ளது. இன்னும் 2-3 போட்டிகளில் வென்றால் மிக எளிதாக பிளே ஆப் சுற்றுக்கு டெல்லி அணி சென்றுவிடும். டெல்லி அணியின் பேட்டிங் மட்டுமின்றி பீல்டிங்கும் மிக சிறப்பாக இருக்கிறது.
கேப்டன்
முக்கியமாக டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் இந்த ஐபிஎல் சீஸனின் மிக சிறந்த கேப்டனாக உருவெடுத்து உள்ளார். மிகவும் இக்கட்டான சூழ்நிலைகளில் இவர் எடுக்கும் முடிவுகள் பெரிய அளவில் கவனம் ஈர்த்து உள்ளது. டெல்லி அணியில் இவர் சிறந்த பேட்ஸ்மேனாகவும் இருக்கிறார். தொடர்ந்து எல்லா போட்டிகளிலும் இவர் சிறப்பாக ஆடி வருகிறார்.
நேற்று எப்படி
டெல்லி அணி நேற்று ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் தொடக்கத்தில் சொதப்பியது. முதல் 4 விக்கெட்டுகளை சீக்கிரம் இழந்தது. ஆனால் ஷ்ரேயாஸ் கொஞ்சம் கூட பதற்றம் அடையவில்லை. மாறாக ஸ்டோனிஸ், ஹெட்மயர் இருவரையும் களமிறக்கி டெல்லி அணி அதிரடி காட்டியது. மிக இக்கட்டான சூழ்நிலையில் பதற்றம் அடையாமல்.. ஷ்ரேயாஸ் மிக சரியான முடிவுகளை எடுத்தார்.
ஓவர் மாற்றினார்
அதேபோல் சார்ஜா பிட்சில் விக்கெட் எடுப்பது மிகவும் கடினம். அதிலும் அஸ்வின் போன்ற ஆப் ஸ்பின் பவுலர்கள் இங்கு விக்கெட் எடுப்பது கடினம். ஆனால் இதே மைதானத்தில் ராஜஸ்தான் அணியை ஆல் அவுட் செய்தது மட்டுமன்றி.. அஸ்வினை வைத்தே இரண்டு முக்கியமான விக்கெட்டை ஷ்ரேயாஸ் எடுத்தார். சார்ஜா மைதானத்தில் 200க்கும் குறைவான ரன் அடித்து அதை இவர் டிபன்ட் செய்த விதம் பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றுள்ளது.
முக்கியமான அணிகள்
பஞ்சாப், சிஎஸ்கே என்று முக்கியமான அணிகளை எல்லாம் ஷ்ரேயாஸ் இந்த முறை வீழ்த்தி உள்ளார். இந்த ஐபிஎல்லின் பெஸ்ட் கேப்டன் தான்தான் என்பதை ஏறத்தாழ இவர் நிரூபித்துவிட்டார். அதேபோல் பாண்டிங் வழி காட்டுதல் வேறு இவருக்கு இருக்கிறது. இதனால் இந்த ஐபிஎல் சீசனில் வெற்றிபெற வாய்ப்புள்ள அணிகளில் டெல்லி அணி முன்னணியில் இருக்கிறது.