2020 ஐபிஎல் தொடர்
2020 ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. செப்டம்பர் 19 அன்று சிஎஸ்கே அணி தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சந்திக்க உள்ளது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணியை விட, மும்பை இந்தியன்ஸ் வலுவான அணியாக காட்சி அளிக்கிறது.
இரு வீரர்கள் விலகல்
அதற்கு முக்கிய காரணம் அனுபவ வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் சிஎஸ்கே அணியில் இருந்து சில நாட்கள் முன்பு விலகியது தான். அவர்கள் இருவரும் அனுபவ வீரர்கள். ஐபிஎல் தொடரில் பல போட்டிகளை வென்று கொடுத்தவர்கள்.
மாற்று வீரர்கள் தேர்வு இல்லை
அவர்கள் இருவருக்கும் மாற்று வீரர்களையாவது சிஎஸ்கே தேர்வு செய்து இருக்கலாம். ஆனால், இதுவரை சிஎஸ்கே அணி யாரையும் தேர்வு செய்யவில்லை. அணி விவகாரங்களை கேப்டன் தோனி பார்த்துக் கொள்வார் என சிஎஸ்கே அணி நிர்வாகம் தெளிவாக கூறி விட்டது.
தோனி எடுத்த முடிவு
கேப்டன் தோனி இருக்கின்ற வீரர்களை வைத்தே 2020 ஐபிஎல் தொடரை சந்திக்க முடிவு செய்துள்ளார். எனினும், அணியில் அந்த அளவுக்கு சிறந்த வீரர்கள் இருக்கிறார்களா? என்றால் நிச்சயம் இல்லை. மேலும், மற்ற அனுபவ வீரர்களும் வயதான வீரர்களாகவே உள்ளனர்.
அனுபவம் குறைந்த வீரர்கள்
சிஎஸ்கே அணியில் ரெய்னா, ஹர்பஜன் சிங் விலகலுக்குப் பின் 22 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் மோனு குமார், கேஎம் ஆசிப், சாய் கிஷோர், நாராயண் ஜெகதீசன், ருதுராஜ் கெயிக்வாட் ஆகியோர் அதிக அனுபவம் அற்ற வீரர்கள். கரன் சர்மா கூட சில ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே ஆடிய அனுபவம் கொண்டவர்.
ருதுராஜ் கெயிக்வாட் நிலை
இதில் ருதுராஜ் கெயிக்வாட்டிற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு நீங்கவில்லை. அவரால் இந்த ஐபிஎல் சீசனில் போட்டிகளில் பங்கேற்கா முடியுமா? என்பதும் தெரியவில்லை. இந்த சூழ்நிலையில் தான் தோனி மாற்று வீரர்கள் தேர்வு செய்வதில் எந்த முடிவும் எடுக்காமல் இருக்கிறார்.
அமைதி காக்கும் சிஎஸ்கே
சிஎஸ்கே அணி நிர்வாகமும் இதில் அமைதி காத்து வருகிறது. அந்த அணி நிர்வாகிகள் மிக உறுதியாக தோனியை நம்பி இந்த விவகாரத்தில் தலையிடாமல் உள்ளது. அணியில் கூடுதலாக இரண்டு சிறந்த வீரர்கள் இருந்தால் அது அணித் தேர்வில் உதவியாக இருக்கும்.
மற்ற அணிகள் எப்படி?
மற்ற சில ஐபிஎல் அணிகளிலும் 22 வீரர்களே உள்ளனர். ஆனால், அந்த அணிகளில் வயதான வீரர்கள், அனுபவம் இல்லாத வீரர்கள் என்பன போன்ற சிக்கல்கள் இல்லை. கொல்கத்தா, டெல்லி போன்ற அணிகளில் சரியான சமநிலை உள்ளது. அது சிஎஸ்கே அணியில் இல்லை என்ற நிலையில் தான் மாற்று வீரர்கள் தேர்வு செய்யாமல் இருப்பது பாதிப்பை ஏற்படுத்தும் விஷயமாக உள்ளது.
ரிஸ்க் எடுத்த தோனி
தோனி அணியில் இருக்கும் வீரர்களுக்கு கூடுதல் வாய்ப்பு அளிக்கும் நோக்கில் புதிய வீரர்களை தேர்வு செய்யாமல் இருக்கக் கூடும் என்றே விமர்சகர்கள் கூறுகின்றனர். சிஎஸ்கே அணியுடன் இத்தனை காலம் பயணித்தும், அதிக வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க அவர் இந்த ரிஸ்க்கை எடுத்துள்ளார். மற்ற அணிகளின் கேப்டன்கள் மற்றும் அணி நிர்வாகங்கள் ஒரு வீரர் விலகினால் உடனடியாக மாற்று வீரரை தேர்வு செய்து விடுகின்றனர். அவரை பயன்படுத்தாவிட்டாலும் கூட பாதுகாப்பு கருதி அவ்வாறு செய்கின்றனர்.
சிக்கல் வரலாம்
ஐபிஎல் தொடர் சுமார் இரண்டு மாத காலம் நடைபெற உள்ளது. இந்த காலகட்டத்தில் நிச்சயம் சில வீரர்களுக்கு காயம் ஏற்படும். அப்போது தான் மாற்று வீரர்களை தேர்வு செய்யாததன் பலனை சிஎஸ்கே அனுபவிக்கும் என சில விமர்சகர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். குறிப்பாக பிளே-ஆஃப் போட்டிகளின் போது அந்த பாதிப்பு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள்.