அணி தேர்வு
சிஎஸ்கே அணியின் மோசமான சொதப்பலுக்கு காரணம் என்ன என்று பார்த்தால் அது கண்டிப்பாக மோசமான அணி தேர்வு என்றுதான் கூற வேண்டும். கேப்டன் தோனி முழுக்க முழுக்க மூத்த வீரர்களை மட்டுமே நம்பி இருந்ததுதான் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது . வாட்சன், ஜாதவ், டுபிளசிஸ் போன்ற மூத்த வீரர்களை மட்டுமே தோனி நம்பி இருந்தார்.
எப்படி
இதில் வாட்சன் ஒரு சில போட்டிகளில் நன்றாக ஆடினார், டு பிளஸிஸும் ஒரு சில போட்டிகளில் நம்பிக்கை கொடுத்தார். ஜாதவ் எந்த போட்டியிலும் சரியாக ஆடவில்லை. இந்த வீரர்கள் எல்லாம் மோசமாக பேட்டிங் செய்தாலும் தோனி இவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கி வந்தார். மூத்த வீரர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட தோனி இவர்கள் எத்தனை முறை தோல்வி அடைந்தாலும் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தார்.
வாய்ப்பு
இந்த நிலையில் சிஎஸ்கே அணி மொத்தமாக 8 போட்டிகளில் தோல்வி அடைந்த பின்புதான் முதல் முறையாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கினார். அதுவும் கூட இணையத்தில் தோனியை பலரும் கடுமையாக விமர்சனம் செய்த பின்புதான் வாய்ப்பு வழங்கினார். இளைஞர்களுக்கு ஸ்பார்க் இல்லை. அதனால் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்று தோனி குறிப்பிட்டு இருந்தார்.
தோனி பேச்சு
தோனியின் இந்த பேச்சு கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. இதன் காரணமாகவே அவரை இணையத்தில் பலரும் கிண்டல் செய்து வந்தனர். இந்த நிலையில் அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்ட ரூத்துராஜ் நேற்று மிகவும் சிறப்பாக ஆடினார். 3 சிக்ஸ், 4 பவுண்டரி என்று 51 பந்தில் ரூத்துராஜ் 65 ரன்கள் எடுத்தார். இவரின் ஆட்டத்தை பார்த்து நேற்று சிஎஸ்கே வீரர்கள் பலர் ஆடிப்போனார்கள்.
ஆடிப்போனார்கள்
தோனியே நேற்று ரூத்துராஜ் ஆட்டத்தை பார்த்து ஆடிப்போய் உள்ளார். அதோடு தான் செய்த தவறு ஒன்றையும் அவர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். அதில், ரூத்துராஜ் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்தார். ரூத்துராஜ் இரண்டாவது அல்லது மூன்றாவது போட்டியில் இப்படி ஆடி இருந்தால் அவருக்கு வாய்ப்பு கொடுத்து இருப்போம். எங்களுக்கு கொஞ்சம் அவரை பற்றி தெரிந்திருக்கும்... அப்போதே அவர் இப்படி ஆடி இருக்கலாம் , என்று குறிப்பிட்டார்.
தவறிவிட்டோம்
ரூத்துராஜூக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்க தவறிவிட்டோம் என்று தோனி வெளிப்படையாக ஒப்புக்கொண்டு இருக்கிறார். ஒருவேளை தோனி இவருக்கு வாய்ப்பு கொடுத்து ஓப்பனிங் இறக்கி இருந்தால் சிஎஸ்கே சில போட்டிகளில் வென்று இருக்க கூட வாய்ப்பு உள்ளது. ஆனால் தோனி இவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து ஊக்குவிக்கவில்லை.
இப்போது
அப்போது தவறவிட்டுவிட்டு.. இப்போது வந்து தோனி புலம்பிக்கொண்டு இருக்கிறார். இதனால் தோனி மீது ரசிகர்கள் மட்டுமின்றி அணி நிர்வாகமும் கோபத்தில் உள்ளது என்கிறார்கள். அடுத்த சீசனில் வாட்ஸன் கண்டிப்பாக சிஎஸ்கே அணிக்காக ஆட மாட்டார். தோனியின் முடிவுகளை சிஎஸ்கே கண்டிப்பாக கேள்விக்கு உள்ளாக்கும் என்கிறார்கள். அடுத்த வருடம் சிஎஸ்கே அணியின் முழு நேர ஓப்பனராக ரூத்துராஜ் களமிறங்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.