பரிசோதனை முடிவு
தோனி மற்றும் மோனு குமார் ராஞ்சியில் ஆகஸ்ட் 12 அன்று கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு மாதிரிகளை கொடுத்து இருந்தனர். அதன் முடிவு இன்று வெளியானது. அதில் தோனி மற்றும் மோனு குமார் ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி ஆகி உள்ளது.
பயிற்சி முகாம்
இருவரும் ஆகஸ்ட் 14 அன்று சென்னை கிளம்பி வர உள்ளனர். சென்னையில் ஆறு நாட்கள் சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாம் நடக்க உள்ளது. அதன் பின் ஆகஸ்ட் 21 அன்று சிஎஸ்கே அணி ஐக்கிய அரபு அமீரகம் கிளம்பிச் செல்ல உள்ளது.
2020 ஐபிஎல் தொடர்
2020 ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெறவில்லை. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த சீசன் முழுவதும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்க பிசிசிஐ பல்வேறு விதிமுறைகளை அமல்படுத்தி உள்ளது.
மூன்று முறை பரிசோதனை
அதன்படி தான் தோனி மற்றும் சிஎஸ்கே வீரர்கள் தங்கள் ஊர்களில் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் அனைவரும் சென்னை வந்து சேர்ந்த உடன் ஆறு நாட்களில் மூன்று முறை பரிசோதனை செய்யப்படும். அதிலும் நெகட்டிவ் முடிவு வர வேண்டும்.
ரசிகர்கள் உற்சாகம்
அதன் பின்னரே சிஎஸ்கே அணி ஐக்கிய அரபு அமீரகம் செல்லும். தோனி சென்னை வந்த பின் பயிற்சி முகாமில் கலந்து கொள்வார் என்பதால் தோனி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். முன்பு போல சிஎஸ்கே அணியின் பயிற்சியை ரசிகர்கள் நேரில் காண முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.