சிஎஸ்கே நிலை
2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் நிலை ஊசலாடி வருகிறது. அந்த அணி துவக்கம் முதலே மோசமான பேட்டிங் - சேஸிங் திட்டங்களால் தோல்வி அடைந்து வந்தது. பந்துவீச்சை பலப்படுத்திய போதும், பேட்டிங் அந்த அணியின் பலவீனமாகவே இருந்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டி
சிஎஸ்கே இனி வரும் போட்டிகளில் தொடர்ந்து வென்றால் பிளே-ஆஃப் செல்லலாம் என்ற நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சந்தித்தது, அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 125 ரன்கள் மட்டுமே எடுத்த சிஎஸ்கே அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
ஸ்பார்க் இல்லை
அந்தப் போட்டியின் முடிவில் பேசிய கேப்டன் தோனி சம்பந்தமே இல்லாமல் பழியைத் தூக்கி இளம் வீரர்கள் மீது போட்டார். இளம் வீரர்களிடம் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இல்லை, உத்வேகம் இல்லை எனும் பொருள் படும்படி "ஸ்பார்க்" இல்லை என கூறினார்.
கடும் விமர்சனம்
தோனியின் இந்தப் பேச்சு ரசிகர்கள், விமர்சகர்களை அதிர வைத்தது. கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தோனியை கடுமையாக விளாசி இருந்தார். அணியில் இருக்கும் மூத்த வீரர்களிடம் ஸ்பார்க் உள்ளதா? குறிப்பாக கேதர் ஜாதவ்விடம் ஸ்பார்க் இருந்ததா? என அவர் விளாசினார்.
பிளே-ஆஃப் வாய்ப்பு
இதற்கிடையே, சிஎஸ்கே அணி பிளே-ஆஃப் செல்ல இனி வரும் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என கூறப்பட்டது. அதன் பின் மற்ற அணிகளின், வெற்றி, தோல்விகளை உற்று நோக்க வேண்டும். மற்ற அணிகளின் புள்ளிகள் அடிப்படையில் சிஎஸ்கே பிளே-ஆஃப் செல்ல லேசான வாய்ப்பு இருந்தது.
தோனி என்ன சொன்னார்?
சிஎஸ்கே தொடர்ந்து வெற்றிக்காக போராடினால் தான் பிளே-ஆஃப் செல்ல முடியும். ஆனால், தோனி ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டிக்கு பின் பேசுகையில் சிஎஸ்கே அணி 2020 ஐபிஎல் தொடரையே கை விட்டு விட்டது போல பேசினார். இந்த சீசனில் சிஎஸ்கே அணி நல்ல முறையில் ஆடவில்லை என்றார்.
இளைஞர்களுக்கு வாய்ப்பு
பின் இதுவரை நாங்கள் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கவில்லை. இனி வரும் போட்டிகளில் அவர்கள் அதிக வாய்ப்புக்களை பெறுவார்கள், அவர்கள் அணியில் தங்கள் இடத்தை பற்றி யோசிக்காமல் தங்களின் ஆட்டத்தை ஆடலாம் என்றார் தோனி.
முடிவு என்ன?
தோனி பேசியதை வைத்துப் பார்த்தால் சிஎஸ்கே இனி வரும் போட்டிகளை பயிற்சிப் போட்டிகள் போலவே ஆட உள்ளது. வெற்றிக்காக எந்த போராட்டத்தையும் சிஎஸ்கே வெளிப்படுத்தப் போவதில்லை என்பதையே அந்த அணியின் கேப்டன் தோனி கூறி உள்ளார்.
ரசிகர்கள் அதிர்ச்சி
ஒரு தலைவனாக தோனி பிளே-ஆஃப் செல்ல போராடுவார் என எதிர்பார்த்த சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதே மனநிலை தான் சிஎஸ்கே அணியை இந்த சீசனில் துவக்கம் முதலே வெற்றி பெற விடாமல் தடுத்தது. தற்போது தோல்விக்கு பின்னும் அந்த மனநிலை மாறவில்லை.
ரசிகர்களுக்கு கூட நம்பிக்கை உள்ளது...
சிஎஸ்கே பிளே-ஆஃப் செல்வது கடினம் என்ற பேச்சு இருந்த போது, அந்த அணியின் தீவிர ரசிகர்கள் மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளை வைத்து சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பெறவும் வாய்ப்பு உள்ளது என கூறி தங்கள் அணி மீதான நம்பிக்கையை இழக்காமல் இருந்தனர். ஆனால், அந்த ரசிகர்கள் வைத்த நம்பிக்கையை கூட கேப்டன் தோனி சிஎஸ்கே அணி மீது வைக்கவில்லை.