தயாரான தோனி
தோனி 2020 ஐபிஎல் தொடருக்கு கடந்த மார்ச் மாதம் முதலே தயாராகி வந்தார். எனினும், துரதிர்ஷ்டவசமாக கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக 2020 ஐபிஎல் தொடர் கால வரையின்றி தள்ளி வைக்கப்பட்டது. தற்போது ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19 முதல் துவங்க உள்ளது.
பல்வேறு தடங்கல்கள்
சிஎஸ்கே அணி பல்வேறு தடங்கல்களுக்கு நடுவே பயிற்சி செய்யத் துவங்கி உள்ளது. இரு வீரர்களுக்கு ஏற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு, ஐபிஎல் தொடரில் இருந்து சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் விலகல் என பல சிக்கல்கள் எழுந்தன.
தோனி அமைதி
எத்தனை தடங்கல் வந்தாலும் கேப்டன் தோனி எதற்கும் அசரவில்லை. எப்போதும் போல அமைதியாகவே காட்சி அளித்த தோனி சிஎஸ்கே அணியுடன் பயிற்சி செய்யத் துவங்கினார். மார்ச் மாதம் நடந்த பயிற்சி போலவே இந்த முறையும் பயிற்சியில் அதிரடி ஆட்டம் ஆடினார்.
மெகா சிக்ஸ்
இந்த நிலையில், சிஎஸ்கே அணி வீரர்கள் தங்களுக்குள் பயிற்சிப் போட்டியில் ஆடினர். அப்போது சுழற் பந்துவீச்சை எதிர்கொண்ட தோனி மெகா சிக்ஸ் ஒன்றை அடித்தார். பந்து பவுண்டரி எல்லையை கடந்து, மைதானத்தை கடந்து பறந்தது.
காணாமல் போய் விட்டது
இந்த காட்சியை சிஎஸ்கே அணியின் மேனேஜர் ரஸ்ஸல் ராதாகிருஷ்ணன் வீடியோ எடுத்து வந்தார். அவர் பந்து மைதானத்தை விட்டே பறந்து காணாமல் போய் விட்டது என்று கூறினார். அப்போது அருகே இருந்த முரளி விஜய் அந்த சிக்ஸ் பற்றி பேசினார்.
இது வெறும் பவரா?
"இது வெறும் பவரா ரஸ்? இது வெறும் பவரா?" என தோனி சிக்ஸ் அடித்த விதம் குறித்து கேள்வி கேட்டார். அதற்கு ரஸ்ஸல் ராதாகிருஷ்ணன், "எனக்கு தெரியவில்லை. நீங்களே சொல்லுங்கள்" என்றார். முரளி விஜய் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அதற்கு பதில் அளித்தார்.
ப்யூட்டிஃபுல் டைமிங்
"ப்யூட்டிஃபுல் டைமிங், பேட்டின் வேகம் மற்றும் ஸ்விங் .. இது ஒரு பரிசு. இதை விட சிறப்பாக செயல்பட முடியாது" என்று முரளி விஜய் தெரிவித்தார். அவர் பேசிய காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தோனி ரசிகர்கள் அதை பகிர்ந்து வருகின்றனர்.
பேட்டிங் ஆர்டர்
சுரேஷ் ரெய்னா இல்லாத நிலையில், சிஎஸ்கே அணி மிடில் ஆர்டரில் தோனியை மட்டுமே அதிகம் சார்ந்து இருக்க வேண்டிய நிலையில் உள்ளது. தோனி இந்த சீசனில் பேட்டிங் ஆர்டரில் மேலே ஆடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.