வாயடைக்க வைத்த சிஎஸ்கே
2020 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி அபாரமாக ஆடி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிஎஸ்கே அணி வயதான அணி, நல்ல வீரர்கள் இல்லை என்றெல்லாம் பேசிய அனைவரையும் வாயடைக்க வைத்தது அந்த அணியின் செயல்பாடு.
தோனி சூப்பர்
தோனி வழக்கம் போல மீண்டும் தன் சிறப்பான கேப்டன்சியை வெளிப்படுத்தினார். அவரது ஒவ்வொரு முடிவிலும் பலன் கிடைத்தது. சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் இல்லாத குறையை உணரவே முடியாத அளவுக்கு சிஎஸ்கே அணியை செயல்பட வைத்தார்.
முதல் போட்டி
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 162 ரன்கள் குவித்தது. அடுத்து சேஸிங் செய்த சிஎஸ்கே அணிக்கு மோசமான துவக்கம் கிடைத்தாலும், அடுத்து வந்த அம்பதி ராயுடு 71 ரன்கள் குவித்து மிரட்டினார்.
ஜடேஜா
பாப் டுபிளெசிஸ் மறுமுனையில் நின்றாலும், சிஎஸ்கே அணிக்கு கடைசி 4 ஓவர்களில், ஓவருக்கு 10 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. அப்போது தோனி ஐந்தாவது பேட்ஸ்மேனாக இறங்கவில்லை. அவருக்கு பதில் ஜடேஜா இறங்கினார்.
தோனி வரவில்லை
ஜடேஜா 5 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன் பின்னும் தோனி வரவில்லை. இளம் இங்கிலாந்து வீரர் சாம் கர்ரன் களமிறங்கினார். அவர் 2 சிக்ஸ், 1 ஃபோர் அடித்து 6 பந்துகளில் 18 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
சிஎஸ்கே வெற்றி
ஜடேஜா, சாம் கர்ரன் இருவருமே விக்கெட் பறிபோவதை பற்றி கவலையே இல்லாமல் தான் ஆடினார்கள். அவர்கள் வெளியேறிய பின்னர் தான் தோனி வந்தார். பாப் டுபிளெசிஸ் சேஸிங்கை வெற்றிகரமாக முடித்து வைத்தார். ஜடேஜா, சாம் கர்ரன் ஏன் தோனிக்கு முன்பே களமிறங்கினார்கள்?
இரண்டு ஸ்பின்னர்கள்
இது பற்றி போட்டிக்கு பின் பேசிய தோனி, மும்பை அணியில் ஒரு லெக் ஸ்பின்னர் மற்றும் இடது கை ஸ்பின்னர் இருந்தனர். கடைசி ஓவர்களில் அவர்களது பந்துவீச்சை எப்படி வீசினாலும் அடிப்போம் என்பதை உணர்த்தவே ஜடேஜா, சாம் கர்ரனை முன்பே அனுப்பியதாக கூறினார்.
அடித்து ஆடுங்கள்
இது தான் இந்த ஐபிஎல் சீசன் முழுவதும் சிஎஸ்கே அணியின் திட்டம். ஜடேஜா, சாம் கர்ரன் இருவரும் அதிரடி பேட்ஸ்மேன்களாக பயன்படுத்த உள்ள தோனி, அவர்கள் விக்கெட் பற்றி கவலையின்றி அடித்து ஆடுமாறு கூறி உள்ளார். அதைத் தான் மும்பை அணிக்கு எதிராக அவர்கள் செய்தனர்.
கவலை வேண்டாம்
சிஎஸ்கே அணியில் ஷேன் வாட்சன் முதல் பியுஷ் சாவ்லா வரை பத்து பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அதனால் சிஎஸ்கே அணி விக்கெட் சரிவு பற்றி கவலை இன்றி அதிரடி ஆட்டம் ஆடலாம். இதில் இன்னொரு சாதகமான விஷயமும் உள்ளது.
இடது கை
ஜடேஜா, சாம் கர்ரன் இருவருமே இடது கை பேட்ஸ்மேன்கள். ரெய்னா இல்லாததால் சிஎஸ்கே அணியில் இடது கை பேட்ஸ்மேன்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக விமர்சகர்கள் கூறி வந்த நிலையில், ஜடேஜா, சாம் கர்ரனை மிடில் ஆர்டரில் ஆட வைத்து அதற்கும் முற்றுப் புள்ளி வைத்துள்ளார் தோனி.