சிஎஸ்கே, மும்பை பரிதாபம்
2020 ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் வென்றால் கட்டுக்கடங்காமல் அந்த அணியை பாராட்டுவதும், தோற்றால் புரட்டிப் போட்டு வெளுத்து வாங்குவதும் நடந்து வருகிறது. இதில் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் நிலைமை தான் பரிதாபம்.
புகழ்ச்சி
முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் சிஎஸ்கேவிடம் தோல்வி அடைந்தது. அப்போது ரோஹித் சர்மா கேப்டன்சி கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது. அதே சமயம், வெற்றி பெற்ற சிஎஸ்கே மற்றும் அந்த அணியின் கேப்டன் தோனியை புகழ்ந்து தள்ளினார்கள் விமர்சகர்கள்.
கடும் விமர்சனம்
மும்பை அணி கொல்கத்தாவை வென்ற போது அந்த அணியை பாராட்டித் தள்ளினர். அதே போல, சிஎஸ்கே அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வி அடைந்த போது கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. அதிலும் தோனியின் கேப்டன்சி குறித்து வறுத்து எடுத்து விமர்சனம் செய்தனர்.
அதிரடி ஆட்டம்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 217 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்தியது. துவக்க வீரர்கள் ஷேன் வாட்சன், முரளி விஜய் முதலில் அதிரடியாக ஆடி வந்தனர். அவர்கள் விக்கெட் வீழ்ந்த உடன் சாம் கர்ரன் ஆட வந்தார்.
தடுப்பாட்டம்
சாம் கர்ரன் விக்கெட்டும் வீழ்ந்த உடன் சிஎஸ்கே அணி தடுப்பாட்டம் ஆடத் துவங்கியது. கேதர் ஜாதவ், பாப் டுபிளெசிஸ் நிதனாமாக விக்கெட் பறிகொடுக்காமல் ஆடினர். ஜாதவ் ஆட்டமிழந்த பின் 10 ஓவர்களுக்கு பின்னர் தான் பாப் டுபிளெசிஸ் அதிரடி ஆட்டம் ஆட முயற்சி செய்தார்.
தோனி நிதான ஆட்டம்
அதன் பின் கடைசி நேரத்தில் தோனி நிதான ஆட்டம் ஆடினார். வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் அவர் ஆடவில்லை, ஓவருக்கு 18, 20 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் சிங்கிள் ரன் எடுத்து அதிர்ச்சி அளித்தார்.
மூன்று சிக்ஸர்கள்
கடைசி ஓவரில் 36 ரன்களுக்கும் மேல் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் அந்த ஓவரில் திடீரென மூன்று சிக்ஸர்கள் அடித்து வெற்றி இலக்கை நெருங்கினார் தோனி. தோல்வி எனத் தெரிந்த பின்னர் அவர் சிக்ஸ் அடித்ததும் விமர்சனத்துக்கு உள்ளானது.
நெட் ரன் ரேட்
அதே சமயம், தோனி சிஎஸ்கே அணியின் நெட் ரன் ரேட் பாதிக்கப்படக் கூடாது என்பதை மனதில் வைத்தே 4 விக்கெட்கள் வீழ்ந்த உடன் தடுப்பாட்டம் ஆட வைத்து நெட் ரன் ரேட் வித்தியாசத்தை குறைத்துக் கொண்டார். அது புள்ளிப் பட்டியலில் பிளே-ஆஃப் செல்ல சிஎஸ்கே அணிக்கு உதவும் என கூறப்பட்டது.
மீண்டும் பெரிய இலக்கு
அப்போது வெற்றிக்காக போராடாமல் நெட் ரன் ரேட்டுக்காக ஆடிய சிஎஸ்கேவை விமர்சகர்கள் காய்ச்சி எடுத்தனர். அந்தப் போட்டிக்கு இரு நாட்கள் கழித்து நடந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போட்டியில் பெங்களூர் அணி 207 ரன்களை துரத்தியது.
பெங்களூர் பரிதாபம்
அப்போது அந்த அணி பெரிய இலக்கு என்ற அழுத்தத்தில் ஆழ்ந்து விக்கெட்களை வேகமாக பறிகொடுத்து 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தற்போது அந்த அணியின் நெட் ரன் ரேட் பாதாளத்தில் சரிந்து -2.175 ஆக உள்ளது.
தோனி ஜீனியஸ்
அதே சமயம், தோல்வி அடைந்தாலும் குறைந்த வித்தியாசத்தில் தோற்ற சிஎஸ்கே அணியின் நெட் ரன் ரேட் -0.145 என்பதாக உள்ளது. தோனி ஒரு ஜீனியஸ் என பெங்களூர் அணியின் பரிதாப தோல்வியை பார்த்த பின் ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.
என்ன நடந்து இருக்கும்?
சிஎஸ்கே அணி அந்தப் போட்டியில் பதற்றம் அடைந்து 4 விக்கெட் வீழ்ந்த பின்னும் அதிரடி ஆட்டம் ஆட முயற்சி செய்து இருந்தால் பெங்களூர் அணி போலவே 100 முதல் 150 ரன்களுக்குள் ஆல் - அவுட் ஆகி இருக்க வாய்ப்பு உள்ளது. அதை தவிர்த்து இருக்கிறார் தோனி.
கப்சிப்
தற்போது தோனியை பெரும்பாலான ரசிகர்கள் புகழ்ந்து வரும் நிலையில், அவரை கடுமையாக விமர்சனம் செய்த விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் கப்சிப் என அமைதியாக உள்ளனர். தோனியின் இந்த பதற்றமில்லாத கேப்டன்சியால் தான் சிஎஸ்கே ஒவ்வொரு முறையும் பிளே-ஆஃப் செல்கிறது.