ஐபிஎல் தொடர்
2020 ஐபிஎல் தொடர் நீண்ட தாமதத்திற்குப் பின் செப்டம்பர் 19 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நடுவே நடக்க உள்ள தொடர் என்பதால் பிசிசிஐ முன்னெச்சரிக்கை விதிமுறைகளை வகுத்து உள்ளது.
சிஎஸ்கே அணி திட்டம்
முன்னதாக மற்ற அணிகளுக்கு முன்பாக ஆகஸ்ட் 8 அன்றே ஐக்கிய அரபு அமீரகம் செல்ல திட்டமிட்டு இருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதன் மூலம் கூடுதல் பயிற்சி செய்யலாம் என அந்த அணி திட்டமிட்டு இருந்தது. ஆனால், பிசிசிஐ முன்னெச்சரிக்கை விதிகளை பின்பற்றித் தான் சிஎஸ்கே அணி செல்ல வேண்டும் என கூறியதால் சிஎஸ்கே அணியின் திட்டம் மாறி உள்ளது.
பயிற்சி அவசியம்
மற்ற அணிகளுக்கு பின் ஆகஸ்ட் 22 அன்று தான் சிஎஸ்கே வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகம் செல்ல உள்ளனர். இந்திய வீரர்கள் கடந்த ஐந்து மாதமாக பயிற்சி இன்றி இருக்கும் நிலையில் சிஎஸ்கே அணியில் இடம் பெற்று இருக்கும் இந்திய வீரர்களுக்கு பயிற்சி அவசியம் என அந்த அணி நிர்வாகம் கருதுகிறது.
தோனி திட்டம்
மேலும், சிஎஸ்கே அணியில் பல வீரர்கள் சர்வதேச போட்டிகளிலும் இடம் பெறுவதில்லை. இந்த நிலையில், சிஎஸ்கே அணி கேப்டன் தோனி அதிரடியாக திட்டம் வகுத்து சென்னையிலேயே பயிற்சி முகாம் நடத்த சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் கூறியதாகவும், அதை ஏற்று சிஎஸ்கே நிர்வாகம் அனுமதி பெற்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
சிஎஸ்கே ஏற்பாடு
ஆகஸ்ட் 14 அன்று அனைத்து சிஎஸ்கே வீரர்களும் தனி விமானத்தில் சென்னை வர உள்ளனர். பின் ஆகஸ்ட் 15 முதல் 20 வரை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை சிஎஸ்கே அணி செய்து வருவதாக கூறப்படுகிறது
தமிழக அரசு அனுமதி
சென்னையில் லாக்டவுன் விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில் சிஎஸ்கே அணியின் பயிற்சிக்கு தமிழக அரசிடம் அனுமதி பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சேப்பாக்கம் மைதானமும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
பயிற்சியாளர் இல்லை
இந்த பயிற்சி முகாமில் வெளிநாட்டினர் பங்கேற்க அனுமதி இல்லை. அதனால், பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் மற்றும் வெளிநாட்டை சேர்ந்த பிற உதவியாளர்கள் பங்கேற்க முடியாது. சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி சென்னையை சேர்ந்தவர். அவர் தலைமையில் தான் இந்த பயிற்சி முகாம் நடக்க உள்ளது.
முன்னெச்சரிக்கை
கொரோனா வைரஸ் பாதிக்காமல் வீரர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு சிஎஸ்கே அணிக்கு உள்ளது. பிசிசிஐயும் அது குறித்த விதிமுறைகளை ஏற்கனவே அளித்துள்ளது. அதை பின்பற்றி வீரர்கள் ஆறு நாட்களும் ஹோட்டல் மற்றும் மைதானத்தை தாண்டி வேறு எங்கும் செல்ல மாட்டார்கள் என அணி நிர்வாகம் கூறி உள்ளது.
ரசிகர்கள் இல்லை
வழக்கமாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாம் நடந்தால் ரசிகர் கூட்டம் அலைமோதும். இந்த முறை அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பும் சிஎஸ்கே அணிக்கு உள்ளது.