தோனி நிலை
2019 உலகக்கோப்பை தொடருக்கு பின் இரண்டு மாத விடுப்பு எடுத்துக் கொண்ட தோனி, இன்று வரை எந்த கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கவில்லை. அவர் ஏன் அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்பது மர்மமாகவே தொடர்கிறது. அவர் பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்தத்தில் இருந்தும் நீக்கப்பட்டு விட்டார்.
அடுத்த திட்டம்
அடுத்ததாக அவர் 2020 ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கிறார். அது மட்டுமே உறுதியான தகவலாக உள்ளது. தோனியை ஆடுகளத்தில் பார்க்க விரும்பும் ரசிகர்கள், ஐபிஎல் தொடருக்காக காத்துக் கொண்டு இருக்கிறார்கள். மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உடை அணிந்து கேப்டனாக அவரை பார்க்க வேண்டும் என்பதே பலரின் ஆசையாக உள்ளது.
தீவிர பயிற்சி
கடந்த சில வாரங்கள் முன்பு தன் சொந்த ஊரான ராஞ்சியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் அந்த மாநில கிரிக்கெட் வீரர்களுடன் வலைப் பயிற்சியை செய்யத் துவக்கினார் தோனி. அந்த வீடியோவும் அப்போது வைரலாக பரவியது.
தினமும் வருகை
கிரிக்கெட் ஆடாவிட்டாலும், தன் சொந்த ஊரில் இருக்கும் போது மறக்காமல் ராஞ்சி கிரிக்கெட் மைதானத்துக்கு வருகை தந்தார் தோனி. அங்கே உடற் பயிற்சி, டேபிள் டென்னிஸ் அல்லது வலைப் பயிற்சி என எப்போதும் உடற் தகுதியை மேம்படுத்தி வந்தார்.
ரோலர் வாகனம்
இந்த நிலையில், முந்தைய தினம் மைதானத்தில் பயிற்சி பிட்ச் தயார் செய்யப்பட்டு வந்த போது, அதற்கு பயன்படுத்தப்பட்ட பிட்ச் ரோலர் வாகனத்தை கண்ட தோனி, அதை தானும் செலுத்தினார். மெதுவாக நகரும் அந்த வாகனத்தை முன்னும், பின்னுமாக இயக்கினார்.
|
வைரல் ஆன வீடியோ
தோனி பிட்ச் ரோலர் வாகனத்தை இயக்கும் வீடியோ உடனடியாக இணையத்தில் பரவியது. ட்விட்டரில் தோனி ரசிகர்கள் அதை பரப்பி வருகிறார்கள். சில வினாடிகளே ஓடும் வீடியோ என்றாலும், ரசிகர்கள் அதை விடுவதாக இல்லை.
|
ரசிகர்கள் கருத்து
தோனிக்கு பைக், கார் என்றால் பிடிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அவருக்கு வாகனங்கள் மீது உள்ள தீராத ஆசை காரணமாகவே இந்த பிட்ச் ரோலர் வாகனத்தை இயக்குவதாக சில ரசிகர்கள் கூறி உள்ளனர். "இது வேற லெவல் ஆசை" எனவும் சிலர் கூறி உள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் உறுதி
2020 ஐபிஎல் தொடர் முடிந்த பின் தோனி 2021 ஐபிஎல் தொடரிலும் பங்கேற்பார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உறுதியாக கூறி உள்ளது. தோனி 2020 ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி, நல்ல உடற்தகுதியுடன் இருந்தால் இந்திய அணியில் இடம் பெறலாம் என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறி இருந்தார்.
விரைவில் பயிற்சி
இந்த நிலையில், மார்ச் 2 முதல் தோனி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட உள்ளார். சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு உள்ளிட்ட வீரர்கள் ஏற்கனவே பயிற்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. அவர்களுடன் தோனியும் இணைய உள்ளார்.