சிஎஸ்கே அணி
ஐபிஎல் 2020 தொடர் வரும் 19ம் தேதி யூஏஇயில் நடைபெறவுள்ளநிலையில், 8 ஐபிஎல் அணிகளும் தற்போது துபாயில் முகாமிட்டுள்ளன. இதில் சிஎஸ்கே தவிர்த்து மற்ற அணிகள் பயிற்சி ஆட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. சிஎஸ்கே அணி வீரர்கள், ஊழியர்கள் என 13 பேருக்கு கொரோனா தாக்கியுள்ள நிலையில் அவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கவுதம் கம்பீர் ஆலோசனை
இதனிடையே, சொந்த காரணங்களால் சிஎஸ்கே அணி வீரர் சுரேஷ் ரெய்னாவும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடாமல் நாடு திரும்பியுள்ளார். இது அந்த அணிக்கு கடுமையான பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவருடைய இடத்தில் யார் விளையாடுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் ரெய்னாவின் இடத்தில் கேப்டன் எம்எஸ் தோனி இறங்கி விளையாட வேண்டும் என்று முன்னாள் இந்திய துவக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
அதிக பந்துகளை அடித்து ஆடவேண்டும்
ஸ்டார் ஸ்போர்ட்சின் கிரிக்கெட் கனெக்டட் நிகழ்ச்சிக்கா பேசிய கம்பீர், அணியில் ரெய்னா இல்லாத நிலையில் 3வது இடத்தில் இறங்கி விளையாட தோனிக்கு சிறப்பான வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், கடந்த ஒரு ஆண்டாக அவர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்காத நிலையில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பந்துகளை அடித்து விளையாட வேண்டும் என்று கம்பீர் தெரிவித்துள்ளார். சுரேஷ் ரெய்னாவின் இடத்தில் அனுபவமிக்க ஒரு வீரர் விளையாடுவது சிறப்பாக இருக்கும் என்றும் அது தோனியாக இருக்க வேண்டும் என்றும் கம்பீர் மேலும் கூறினார்.
அணியில் அதிக வீரர்கள்
சிறந்த கேம் பினிஷர் என்ற பெயருக்கு சொந்தக்காரராக தோனி உள்ளார். இதையடுத்தே அவர் மிடில் ஆர்டர்களை தாண்டி விளையாடி வருகிறார். ஆனால் ஆட்டத்தை சிறப்பான வகையில் முடிக்க சிஎஸ்கே அணியில் கேதார் ஜாதவ், டுவைன் பிராவோ, சாம் குர்ரான் போன்ற வீரர்கள் உள்ளதாகவும் அவர்கள் அதை பார்த்துக் கொள்வார்கள் என்றும் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.