என்ன சிக்கல்
சிஎஸ்கே அணியில் கடந்த சில போட்டிகளாக மூத்த வீரர்கள் சரியாக ஆடவில்லை.வாட்சன், ஜாதவ், சாவ்லா போன்ற வீரர்கள் சரியாக ஆடவில்லை. அதிலும் ஜாதவ் எல்லாம் மிக மோசமாக பேட்டிங் செய்து பல முறை சிஎஸ்கே அணியின் தோல்விக்கு காரணமாக இருந்தார். இதனால் இவர்களை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
காலி செய்தார்
இவர்களை நீக்காமல் தோனி தொடர்ந்து வாய்ப்புகளை வாரி வழங்கினார். இதை கடுமையாக பலரும் விமர்சனம் செய்து இருந்தனர். இந்த விமர்சனங்களுக்கு பதில் அளித்த தோனி, சிஎஸ்கே அணியில் இளைஞர்களிடம் ஸ்பார்க் இல்லை. அதனால் இவர்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்று பகிரங்கமாக பேசி இருந்தார். தோனியின் இந்த பேச்சு கடும் விமர்சனங்களை சந்தித்து இருந்தது.
விமர்சனம்
இந்த நிலையில் விமர்சனங்களை தொடர்ந்து நேற்றுக்கு சிஎஸ்கே அணியில் இளம் வீரர்கள் ஜெகதீசன், ரூத்துராஜ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இவர்கள் இருவரும் சரியாக ஆடவில்லை. இரண்டு பேருமே நேற்று டக் அவுட்டாகி வெளியேறினார்கள். இதனால் பலரும் தோனி சொன்னது சரிதான் போல.. உண்மையில் இவர்களிடம் ஸ்பார்க் இல்லைதான் போல என்று இணையத்தில் கிண்டல் செய்து இருந்தனர்.
ஆனால் என்ன
ஆனால் இன்னும் சிலர் இது இளம் வீரர்களின் தவறு இல்லை. இது தோனியின் தவறு. தோனிதான் அந்த இளம் வீரர்களுக்கு ஆதரவு அளித்து அவர்களுக்கு முறையான பயிற்சி கொடுத்து இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு மூன்று சீசனாக அவர்களை தோனி பெஞ்சில் உட்கார வைத்தார்.எந்த வருடமும் வாய்ப்பு கொடுக்கவில்லை.
மோசம்
இப்படி வாய்ப்பு கொடுக்காமல் விட்டுவிட்டு.. பேட்டியில் அவர்களுக்கு ஸ்பார்க் இல்லை என்று கூறியுள்ளார். இது மொத்தமாக அந்த இளம் வீரர்களின் தன்னம்பிக்கையை உடைத்து இருக்கும். மொத்தமாக அவர்களின் திறமை மீது அவர்களே கேள்வி எழுப்பி இருப்பார்கள். அதனால்தான் நேற்று பதற்றத்தில் சொதப்பி விட்டனர். அதோடு இவர்களை மும்பை போன்ற அணிக்கு எதிராக, பிளே ஆப் பிரஷர் இருக்கும் போது களமிறக்கி இருக்க கூடாது என்றும் தோனிக்கு எதிராக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.
தயார்
மும்பை, டெல்லி போன்ற அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்புகொடுக்கிறார்கள். இளம் வீரர்களை வளர்த்து கொண்டு வந்து அவர்களை மேட்ச் வின்னர்களாக மாற்றுகிறார்கள். ஆனால் சிஎஸ்கே அணி சாகரை தவிர வேறு எந்த இளம் வீரரையும் அணியில் அறிமுகப்படுத்தவே இல்லை என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.