தோனி பயிற்சி
மிகச் சில இந்திய வீரர்களே ஐபிஎல் தொடருக்கு பயிற்சி செய்யத் துவங்கி உள்ள நிலையில் தோனியும் சத்தமே இல்லாமல் பயிற்சி செய்யத் துவங்கி இருக்கிறார். இந்த சீசனில் தோனியின் ஆட்டம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ஐபிஎல் தாமதம்
2020 ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் காரணமாக சுமார் ஆறு மாதம் தாமதமாக துவங்க உள்ளது. செப்டம்பர் 19 அன்று துவங்க உள்ள ஐபிஎல் தொடருக்கு குறுகிய காலமே இருப்பதால் அனைத்து ஐபிஎல் அணிகளும் அவசர கதியில் தயாராகி வருகின்றன.
வீரர்கள் பயிற்சி
பிசிசிஐ பல்வேறு சிக்கல்களில் சிக்கி பொறுமையாக பணிகளை செய்து வருகிறது. குறிப்பாக வீரர்களுக்கு அதிக காலம் பயிற்சி அளிக்கும் விஷயத்தில் பிசிசிஐ தெளிவான திட்டம் எதையும் செயல்படுத்தவில்லை என்ற புகார் உள்ளது.
பயிற்சி நாட்கள் குறைவு
மார்ச் மாதம் முதல் பயிற்சியே செய்யாமல் இருக்கும் இந்திய வீரர்களுக்கு ஐபிஎல் தொடருக்கு முன் சுமார் ஒரு மாத காலம் பயிற்சி அளிக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால், தற்போது ஆகஸ்ட் 20 அன்று தான் ஐபிஎல் அணிகள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கே செல்ல முடியும் என்ற நிலை உள்ளது.
சிஎஸ்கே திட்டம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனி உட்பட அனைத்து வீரர்களுடன் ஆகஸ்ட் 8 அன்றே அங்கே சென்று தங்கள் வீரர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்க திட்டமிட்டு இருந்தது. ஆனால், பிசிசிஐ கொரோனா வைரஸ் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை விதிமுறைகளை ஐபிஎல் அணிகளுக்கு அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதால் அந்த திட்டம் நிறைவேறவில்லை.
அடுத்தது என்ன?
ஐபிஎல் அணிகள் இனி அனைத்து வீரர்களையும் ஒரே இடத்தில் திரட்டி, அவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்த பின்னரே ஐக்கிய அரபு அமீரகம் செல்ல முடியும். அங்கே சென்ற பின் ஆறு நாள் தனிமைக்கு பின்னரே பயிற்சியை துவக்க முடியும்.
களமிறங்கிய தோனி
இந்த நிலையில் தான் தோனி ராஞ்சி கிரிக்கெட் மைதானத்தில் தனிப்பட்ட முறையில் பயிற்சி செய்ய துவங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அங்கே கடந்த வார இறுதியில் தோனி இரண்டு நாட்கள் உள் அரங்கில் பயிற்சி செய்ததாக தெரிய வந்துள்ளது.
பவுலிங் மெஷின்
தற்போது பிற வீரர்களுடன் பயிற்சி செய்ய முடியாது என்பதால் தன் பவுலிங் மெஷினையும் எடுத்து வந்து தோனி பயிற்சி செய்ததாக ராஞ்சி மைதான அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தோனி இன்னும் சில நாட்கள் பயிற்சி செய்வார் எனவும் கூறப்படுகிறது.
கிரிக்கெட் போட்டிகளில் ஆடவில்லை
பிசிசிஐ தாமதத்தால் பயிற்சி செய்யும் நாட்கள் குறைவதால் அதை சமாளிக்க அவர் தனிப்பட்ட பயிற்சியை துவக்கி இருக்கிறார். அவர் கடந்த ஆண்டு உலகக்கோப்பை அரை இறுதிக்கு பின் எந்த கிரிக்கெட் போட்டியிலும் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.