அணியில் சிக்கல்
சிஎஸ்கே அணியில் சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் விலகலால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டன. அவர்கள் இல்லாததால் ஏற்பட்ட இடைவெளி ஒருபுறம் இருக்க, அவர்களுக்கு மாற்று வீரர்களையும் கேப்டன் தோனி தேர்வு செய்யவில்லை. இருக்கும் வீரர்களை வைத்தே சமாளிக்க முடிவு செய்தார்.
தோல்விகள்
முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்திய சிஎஸ்கே அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளிடம் தோல்வி அடைந்தது. அந்த இரு போட்டிகளில் சிஎஸ்கே சேஸிங் செய்த விதம் அதிர்ச்சி அளித்தது.
சரியான வீரர்கள் இல்லை
இந்த தோல்விகளுக்கு காரணம் சிஎஸ்கே அணியில் சரியான வீரர்கள் இல்லை என்பது தான் என விமர்சகர்கள் கூறினர். குறிப்பாக ரெய்னாவின் இடத்தை நிரப்பும் வீரர் இல்லாமல் தடுமாறி வருவதாக குறிப்பிட்டனர்.சரியான 11 வீரர்களை தேர்வு செய்ய முடியாமல் திணறியது சிஎஸ்கே.
ராயுடு காயம்
முதல் போட்டியில் சிறப்பாக அதிரடி ஆட்டம் ஆடி வெற்றி தேடித் தந்த அம்பதி ராயுடு காயத்தால் அடுத்த இரு போட்டிகளில் ஆடவில்லை. அதுவே தோல்விகளுக்கு காரணம் எனவும் கூறப்பட்டது. பாப் டுபிளெசிஸ் தவிர சிஎஸ்கே அணியில் நிலைத்து நின்று பேட்ஸ்மேன்களே இல்லை என்ற நிலையில் ராயுடு இழப்பு பெரிதாக பாதித்தது.
பிராவோ நிலை என்ன?
மற்றொரு ஆல் - ரவுண்டரான டிவைன் பிராவோ இல்லாததால் கடைசி ஓவர்களில் கட்டுக் கோப்பாக பந்துவீச அனுபவ வீரர் இல்லாத நிலை உள்ளது. பிராவோ காயம் காரணமாக முதல் மூன்று போட்டிகளிலும் ஆடவில்லை.
ரெய்னா வேண்டும்
இதற்கிடையே, இரண்டு போட்டிகளின் அடுத்தடுத்த தோல்விகளால் ரசிகர்கள் 2020 ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ள சுரேஷ் ரெய்னாவை மீண்டும் சிஎஸ்கே அணிக்கு அழைத்து வர வேண்டும் என கூறி வருகின்றனர். அது இணையத்தில் டிரென்டிங் ஆனது.
தோனி உறுதியான முடிவு
ஆனால், கேப்டன் தோனி ரெய்னாவை அணியில் சேர்ப்பதில்லை என உறுதியாக இருக்கிறார். இந்த நிலையில், அணியில் சமநிலை வேண்டும் என்றால் அம்பதி ராயுடு, பிராவோ ஆடியே தீர வேண்டும் என்ற முடிவில் இருக்கும் தோனி அடுத்த போட்டிக்கு ஒரு வாரம் இருந்த நிலையில் அவர்களை தயாராகுமாறு உறுதியாக கூறினார்.
மூன்றே நாளில் நடந்த மாற்றம்
டெல்லி கேபிடல்ஸ் போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்து மூன்றே நாட்களில் அம்பதி ராயுடு, பிராவோ இருவரும் அடுத்த போட்டிகளில் ஆட தயார் என்ற செய்தி வெளியாகி உள்ளது. அவர்கள் இருவரும் அணிக்கு திரும்பினால் சிஎஸ்கே அணி வெற்றிப் பாதைக்கு திரும்பும் என ரசிகர்களும் நம்புகின்றனர்.
இவர்கள் ஆடுவது உறுதி
சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி கூறுகையில் அம்பதி ராயுடு, பிராவோ இருவரும் அடுத்த போட்டிக்கு தயாராகி விட்டதாக கூறினார். அவர்கள் இருவரும் நிச்சயம் அடுத்த போட்டியில் ஆட உள்ளனர். அவர்களுக்கு பதில் அணியில் வாய்ப்பை இழக்கப் போகும் அந்த வீரர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டி
ஏழு நாள் இடைவெளியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு இருக்கும் சிஎஸ்கே அணி, அக்டோபர் 2 அன்று அடுத்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக ஆட உள்ளது. அந்தப் போட்டியிலும் சிஎஸ்கே தோல்வி அடைந்தால் அது பிளே-ஆஃப் வாய்ப்பை சிக்கலாக மாற்றும்.