சிஎஸ்கே அணி நிலை
20200 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி முதல் போட்டியில் அபாரமாக ஆடி மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு முக்கிய காரணம் அம்பதி ராயுடு தான். அப்போது சிஎஸ்கே அணி வலுவான அணியாக காட்சி அளித்தது.
தோல்விகள்
அதன் பின் இரண்டு போட்டிகளில் சிஎஸ்கே அணி மோசமாக ஆடி சேஸிங் செய்யத் தெரியாத அணி என்ற பெயரை எடுத்து தோல்வி அடைந்தது. அம்பதி ராயுடு இந்த இரண்டு போட்டிகளிலும் அணியில் பங்கேற்கவில்லை. அதுதான் தோல்விக்கு காரணம் என பலரும் கூறத் துவங்கினர்.
அம்பதி ராயுடு எங்கே
அம்பதி ராயுடு காயம் காரணமாக முழு உடற்தகுதி இல்லை எனக் கூறி இரண்டு போட்டிகளில் ஓய்வில் இருந்தார். அவர் இல்லாத சிஎஸ்கே அணியில் பாப் டுபிளெசிஸ் மட்டுமே பொறுப்பாக ஆடினார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பினர்.
பேட்டிங் பலவீனம்
சிஎஸ்கே அணியின் பேட்டிங் பலவீனமாக இருப்பது வெளிப்படையாகத் தெரிந்தது. ஷேன் வாட்சன், முரளி விஜய், கேதர் ஜாதவ், தோனி, ரவீந்திர ஜடேஜா என யாரும் பெரிதாக ரன் குவிக்கவில்லை. அம்பதி ராயுடு அணியில் நிச்சயம் இடம் பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
தயார் ஆனார்
இந்த நிலையில், அம்பதி ராயுடு அடுத்த போட்டிக்கு முன் தயார் ஆகி உள்ளார். அவர் பயிற்சியில் ஈடுபட்டு இருப்பதாகவும், அடுத்த போட்டியில் ஆட தயாராக இருப்பதாகவும் சிஎஸ்கே அணி நிர்வாகமும் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங்கும் உறுதியாக கூறி உள்ளனர்.
பேட்டிங் வரிசை மாற்றம்
அம்பதி ராயுடு மீண்டும் அணிக்கு திரும்பும் பட்சத்தில் பேட்டிங் ஆர்டரை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. முரளி விஜய் மோசமாக ஆடி வருகிறார். அவரை நீக்கி விட்டு வேறு துவக்க வீரரை ஆட வைக்க இருக்கிறார் தோனி.
ஒரு வீரரை நம்பி இருக்கும் சிஎஸ்கே
பாப் டுபிளெசிஸ் மூன்றாம் வரிசையில் சிறப்பாக ஆடி வருகிறார். அதை மாற்ற தோனி விரும்பமாட்டார். அம்பதி ராயுடு நான்காம் வரிசையில் பேட்டிங் ஆடுவார். தோனி, ஜாதவ் ஆறாம் மற்றும் ஏழாம் இடத்தில் பேட்டிங் செய்வார்கள். ராயுடுவை நம்பி மீண்டும் பேட்டிங் ஆர்டரை மாற்ற இருக்கிறார் தோனி.
பிராவோ ஆடினால்..
ராயுடு மட்டுமின்றி, டிவைன் பிராவோவும் காயத்தில் இருந்து மீண்டு போட்டிகளில் பங்கேற்க தயாராக இருக்கிறார். அவரையும் அணியில் சேர்க்க வேண்டும் என்றால் பந்துவீச்சு திட்டத்தையும் தோனி மாற்றி அமைக்க வேண்டும். ஹேசல்வுட் தன் இடத்தை இழக்கக் கூடும்.