தோனி ஓய்வு
தோனி கடந்த 2019 உலகக்கோப்பை தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற உள்ளார் என கூறப்பட்டது. எனினும், தோனி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்திய அணி ஆடிய சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் அவர் பங்கேற்காமல் இருந்து வந்தார்.
ஒப்பந்தம் ரத்து
இந்த நிலையில், நீண்ட காலம் அணியில் இடம் பெறாததால் தோனியின் பெயர் பிசிசிஐ ஒப்பந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. அத்துடன் தோனியின் சர்வதேச கிரிக்கெட் முடிவுக்கு வந்துள்ளதாகவே பலரும் முடிவு செய்துள்ளனர். எனினும், ஐபிஎல் மூலம் அவருக்கு ஒரு வாய்ப்பு உள்ளது.
கடைசி வாய்ப்பு
2020 ஐபிஎல் தொடரில் நிச்சயம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆட இருக்கும் தோனி, இந்த தொடரில் சிறப்பாக பேட்டிங் செய்யும் பட்சத்தில் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என கருதப்படுகிறது. இது மட்டுமே இந்திய அணிக்கு திரும்ப தோனிக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு.
உடற்தகுதி நிலை
தோனி பார்மை நிரூபித்து இந்திய அணிக்கு திரும்ப நினைத்தாலும், அவரது உடற்தகுதி அதற்கு ஒத்துழைக்குமா? என்ற கேள்வி உள்ளது. சமீபத்தில், தோனி சிறப்பு விளையாட்டு மருத்துவ நிபுணர் ஒருவரை சந்தித்து உடற்தகுதி குறித்த ஆலோசனை பெற்றது குறிப்பிடத்தக்கது.
கடைசி ஐபிஎல் தொடர்
இந்த நிலையில், 2020 ஐபிஎல் தொடர் தோனியின் கடைசி ஐபிஎல் தொடராகவும் இருக்கலாம். எனவே, இதில் தோனி கேப்டனாக சிறப்பாக ஆடி, சிஎஸ்கே அணியை வெற்றி பெற வைக்க கடுமையாக முயற்சி செய்வார் என்பதில் சந்தேகம் இல்லை.
சிஎஸ்கே பயிற்சி முகாம்
இந்த நிலையில், சர்வதேச போட்டிகளில் அதிகம் ஆடாத வீரர்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் சிறப்பு பயிற்சி முகாமை பிப்ரவரி மாதம் முதல் நடத்தி வருகிறது. அதன் இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் மார்ச் மாதம் துவங்க உள்ளது. அதில் தோனி விரைவில் பங்கேற்க இருக்கிறார்.
சுரேஷ் ரெய்னா பயிற்சி
முன்னதாக சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு உள்ளிட்ட வீரர்கள் பயிற்சி முகாமில் பங்கேற்றனர். அவர்கள் இருவரும் சர்வதேச போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை பெறவில்லை. உள்ளூர் போட்டிகளிலும் அதிக அளவில் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு மாதம் பயிற்சி
மார்ச் 1 முதல் துவங்க இருக்கும் பயிற்சி முகாமில் தோனி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு உள்ளிட்ட முக்கிய சிஎஸ்கே வீரர்கள் பயிற்சியில் ஈடுபட உள்ளனர். தோனி முதல் இரண்டு வாரங்கள் பயிற்சியில் ஈடுபட உள்ளார். அதைத் தொடர்ந்து 4 - 5 நாட்கள் ஓய்வு எடுத்துக் கொண்டு அவர் மீண்டும் பயிற்சியில் ஈடுபட உள்ளார்.
அதிரப் போகும் சேப்பாக்கம்
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு சில நாட்கள் முன்பு தான் சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாம் துவங்கியது. அப்போது சுமார் 15,000 சிஎஸ்கே ரசிகர்கள். மைதானத்தில் திரண்டனர். பயிற்சிக் களம் போட்டிக் களம் போல காட்சி அளித்த அதிசயம் தோனியால் நிகழ்ந்தது. இந்த முறையும், பல ஆயிரம் ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்துக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் துவக்கம்
2020 ஐபிஎல் மார்ச் 29 அன்று துவங்க உள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன. லீக் சுற்றில் சென்னையில் ஏழு போட்டிகளிலும், மற்ற அணிகளின் சொந்த மைதானங்களில் ஏழு போட்டிகளிலும் சிஎஸ்கே அணி ஆட உள்ளது.