ரகசியத்தை கூறினார்
2011 உலகக்கோப்பை தொடருக்கு பின் இதே போன்ற நிலையில் தோனி இருந்ததாகவும், அப்போது அவர் என்ன செய்தார் என்பது பற்றியும் கூறி இரகசியத்தை உடைத்தார் சஞ்சய் பங்கர். சிஎஸ்கே அணியில் யாருக்கு கேப்டன்சியை தோனி விட்டுக் கொடுப்பார் என்பது பற்றியும் கூறினார்.
2020 ஐபிஎல்
2020 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமாக செயல்பட்டது. தன் ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக அந்த அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இந்த நிலையில் தோனி நிலை குறித்து கேள்வி எழுந்தது.
நிச்சயம் ஆடுவேன்
தோனி 2021 ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்தது. அப்போது சிஎஸ்கே அணியின் கடைசி லீக் போட்டியில் ஆடிய தோனி தான் நிச்சயம் 2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக ஆடுவேன் என தெளிவுபடுத்தினார்.
அணியை மாற்ற வேண்டும்
சிஎஸ்கே அணி தற்போது சரியான சமநிலையில் இல்லை. எனவே, அணியை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அது குறித்து தோனியும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவர் இன்னும் சில அதிரடி நகர்வுகளை செய்வார் என்கிறார் சஞ்சய் பங்கர்.
கேப்டன்சியை விட்டுக் கொடுப்பார்
தோனி கேப்டன்சியையும் விட்டுக் கொடுப்பார். ஒரு வீரராக மட்டுமே 2021 ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்பார் எனக் கூறி உள்ளார். சிஎஸ்கே அணிக்கு அடுத்த கேப்டனை உருவாக்க அவர் இந்த முடிவை எடுப்பார் எனவும், யாருக்கு கேப்டன்சியை அளிப்பார் என்பது பற்றியும் கூறினார்.
யாருக்கு
சிஎஸ்கே அணி அடுத்த ஆண்டு மெகா ஏலம் நடக்காத பட்சத்தில் சிஎஸ்கே அணிக்கு கேப்டன்சி செய்யும் தகுதி கொண்ட வீரர்களை அணியில் சேர்க்க வாய்ப்பில்லை. அணியில் உள்ள வீரர்களில் சிஎஸ்கே அணியை வழிநடத்தும் வல்லமை கொண்டவர் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் பாப் டுபிளெசிஸ் தான் என அவர் கூறி உள்ளார்.
2011 உலகக்கோப்பை
தோனி ஏன் இந்த முடிவை எடுப்பார் என்பது பற்றி பேசிய சஞ்சய் பங்கர் 2011 உலகக்கோப்பைக்கு பின் நடந்த சம்பவத்தை கூறினார். அப்போது தோனி உலகக்கோப்பை வென்ற உடன் கேப்டன்சியில் இருந்து விலக வேண்டும் என எண்ணியதாகவும் அப்போது அணியை வழிநடத்த சரியான வீரர் கிடைக்கவில்லை என்பதால் அவரே அந்த சுமையை ஏற்றுக் கொண்டதாகவும் கூறினார்.
கோலியை வளர்த்தார்
உலகக்கோப்பை தொடர் முடிந்த உடன் அப்போது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து தொடர்கள் வந்ததால் தோனி தொடர்ந்து கேப்டனாக இருந்தார். அதன் பின் விராட் கோலியை கேப்டனாக உருவாக்கிய பின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் என்றார் சஞ்சய் பங்கர்.
சாத்தியமா?
சஞ்சய் பங்கார் சொல்வது போல பாப் டுபிளெசிஸ் சிஎஸ்கே அணியின் கேப்டனாக ஆவது சாத்தியமா? இல்லை என்றே தோன்றுகிறது. அதற்கு முதல் காரணம், 2021 ஐபிஎல் தொடருக்கு முன் மெகா ஏலம் நடைபெற உள்ளதாக பிசிசிஐயில் இருந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மெகா ஏலம்
அந்த மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி பல நல்ல வீரர்களை வாங்கக் கூடும். பாப் டுபிளெசிஸ்-ஐ தக்க வைக்குமா? என்பதே அப்போது சந்தேகம் தான். தோனி, ஜடேஜா, தீபக் சாஹர் உள்ளிட்ட சில வீரர்களை மட்டுமே சிஎஸ்கே அணி மீண்டும் தக்க வைக்கும்.