அதிர்ச்சி அடைந்தார்
ரோஹித் சர்மா தொடங்கி வாட்சன் வரை பலர் இந்த ஐபிஎல் தொடரில் பிட்டாக இல்லை. இதை பார்த்த ரசிகர்களே பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் விரேன் ராஸ்க்யூன்கா தனது டிவிட்டரில் ''ஐபிஎல் 2020 வீரர்களை பார்க்கவே அதிர்ச்சியாக இருக்கிறது. பெரும்பாலான வீரர்கள் இதில் பீட்டாக இல்லை. உலகில் வேறு எந்த உடல் சார்ந்த போட்டியிலும் வீரர்கள் இவ்வளவு அன் - பிட்டாக இருந்தது கிடையாது'' என்று விமர்சனம் செய்துள்ளார்... அவர் சொல்வது போல் ஐபிஎல் தொடரில் பல வீரர்கள் பிட்டாக இல்லை என்பது உண்மைதான்.
கிரிக்கெட் எப்படி
கிரிக்கெட் வரலாற்றை எடுத்து பார்த்தால் இலங்கையின் அர்ஜுனா ரணதுங்கா போல அதிக பருமமான வீரர்களும் விளையாடி உள்ளனர். கோலி போல சிக்ஸ் பேக் வைத்த வீரர்களும் விளையாடி வருகிறார்கள். அதனால் கிரிக்கெட் விளையாட உடல் ரீதியான பிட்னஸ் உண்மையில் அவசியமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் கிரிக்கெட் போட்டிகளில், அதுவும் தற்போது இருக்கும் சூழ்நிலையில் கிரிக்கெட் வீரர்கள் விளையாட வேண்டும் என்றால் உடல் ரீதியான பிட்னஸ் ரொம்ப அவசியம் என்று சில வல்லுநர்கள், பயிற்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
மும்பை இந்தியன்ஸ்
இது தொடர்பாக மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் பயிற்சியாளர் லால்சந்த ராஜ்புட் தெரிவித்துள்ள கருத்தில், ஒரு டெஸ்ட் பவுலர் சரியாக பந்து வீச வேண்டும் என்றால் சராசரியாக தினமும் 20-25 கிமீ தூரம் ஓட கூடிய அளவிற்கு அவருக்கு திறன் இருக்க வேண்டும். ஒருநாள் அணி பவுலர் பிட்டாக இருக்க வேண்டும் என்றால் அவரால் 12-15 கிமீ தூரத்திற்கு ஒரே நாளில் ஓடும் அளவிற்கு திறன் இருக்க வேண்டும்.
யோ யோ சோதனை எப்படி?
முன்பெல்லாம் இந்திய அணிக்கு வீரர்களை தேர்வு செய்ய பீப் சோதனை, யோ யோ டெஸ்ட் போன்ற வேகத்தை கணிக்கும் சோதனை மட்டுமே செய்யப்பட்டது. ஆனால் இப்போதெல்லாம் அது பழையது ஆகிவிட்டது. இப்போதெல்லாம் கையில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தி உடல் பிட்னஸ் தினமும் கண்காணிக்கப்படுகிறது, ஒலிம்பிக் போட்டிகளில் செய்யப்படும் லிப்டிங், முறையான டயட்டிங் என்று ஒவ்வொரு வீரரின் பிட்னசும் கண்காணிக்கப்படுகிறது.
கிரிக்கெட் தொடர் பயிற்சி
தற்போது ஒவ்வொரு கிரிக்கெட் தொடருக்கும் முன் இந்திய வீரர்களுக்கு 8-12 வாரங்கள் வீரர்களுக்கு பிட்னஸ் பயிற்சி கொடுக்கப்படும். தினமும் 45-60 நிமிடம் உடலை உறுதிப்படுத்த பயிற்சி அளிக்கப்படும். அதன்பின் கிரிக்கெட் பேட்டிங், பவுலிங் பயிற்சி நாள் முழுக்க வழங்கப்படும். பின் நாளில் இறுதியில் 30-40 நிமிடம் ஜிம்மில் பயிற்சி அளிக்கப்படும், என்று லால்சந்த் கூறியுள்ளார். கொல்கத்தா போன்ற அணிகள் தங்கள் அணிக்காக ஒலிம்பிக் ஓட்டப்பந்தய பயிற்சியாளர்களை கூட நியமித்து இருக்கிறது.
பிட்னஸ் முக்கியம்
இதனால் கிரிக்கெட் வீரர்களும் தங்கள் பிட்னஸ் மீது அதிக கவனம் செலுத்துகிறார்கள். ஆனால் இவ்வளவு பயிற்சிக்கும் இடையில் ரோஹித், கேதார் ஜாதவ் போன்ற வீரர்கள் தொப்பையோடு வலம் வருவது ஏன் என்று கேள்வி எழலாம். இதற்கு சிம்பிள் பதில்.. லாக்டவுன்... லாக்டவுன் காலத்தில் வீரர்கள் சரியாக பயிற்சி எடுக்காமல், சோம்பேறியாக இருந்ததுதான் இந்த தொப்பைக்கு காரணம் என்கிறார்கள்.
தொப்பை காரணம்
கொரோனா காலத்தில் சிலர் தங்களை பிட்டாக மாற்றி உள்ளனர். சிலர் இப்படி உடலின் ஷேப்பை இழந்து உள்ளனர் என்று கொல்கத்தா பயிற்சியாளர் மெக்குலம் கூறியுள்ளார். பல வீரர்கள் கிட்டத்தட்ட 6-7 மாதங்களாக வீட்டில் எதுவும் செய்யவில்லை. தங்கள் தனிப்பட்ட டிரெய்னர்களை கூட இவர்கள் பார்க்கவில்லை. இதனால் இவர்களின் பிட்னஸ் அடி வாங்கியுள்ளது.
புனே வாரியர்ஸ்
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பழைய புனே வாரியர்ஸ் அணியின் பிசியோ வைபவ் தாகா அளித்த பேட்டியில், வீட்டில் உடற்பயிற்சி செய்வது என்பது அவ்வளவு சிறப்பானது கிடையாது. வீட்டில் உடல் பயிற்சி செய்வதும், உடற் பயிற்சியாளர் உங்களுக்கு பயிற்சி அளிப்பதும் ஒன்று கிடையாது. கிரிக்கெட் என்பது குழுவான போட்டி, உடற் பயிற்சியும் அப்படித்தான் இருக்க வேண்டும். வீரர்கள் எல்லோரும் வீட்டில் முடங்கியதும் கூட அவர்கள் பிட்னஸ் இழக்க காரணம் ஆகும்.
ஜிம் இல்லை
இன்னும் சில வீரர்கள் வீட்டில் பெரிய அளவில் ஜிம் இருந்தும் கூட சோம்பேறித்தனம் காரணமாக சரியாக பயிற்சி எடுக்கவில்லை. இதுவும் கூட அவர்களின் தொப்பைக்கு காரணம் என்கிறார்கள். அதேபோல் கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள், டி20 என்று வேறு வேறு மாதிரியான போட்டிகள் உள்ளது. இதற்கு வீரர்கள் வேறு வேறு வகையில் தயார் ஆவதால், அவர்களின் நிரந்தர பிட்னஸ் பாதிக்கப்படுகிறது.
பாதிப்பு அடைகிறது
டி20க்கு தொடருக்கு ஒரு மாதிரியும், டெஸ்ட் தொடருக்கு வேறு மாதிரியும் பயிற்சி செய்ய வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு உள்ளது. ஒவ்வொரு தொடருக்கும் ஒவ்வொரு மாதிரி இவர்கள் தயார் ஆவதால் இவர்களின் பிட்னஸ் ஒரே மாதிரி இருப்பது இல்லை. சிலர் மட்டுமே மூன்றுக்கும் ஏற்றபடி உடலை தயார் செய்கிறார்கள். விராட் கோலி, பும்ரா, பாண்டியா போன்ற சில வீரர்கள் மட்டுமே மூன்று தொடருக்கும் ஏற்றபடி உடலை வைத்துள்ளனர்.
சஞ்சு சாம்சன்
இது தொடர்பாக பேட்டி அளித்துள்ள ராஜஸ்தான் வீரர் சஞ்சு சாம்சன், நான் ஐபிஎல் தொடருக்கு முன் கடுமையாக பயிற்சி செய்தேன். டி20 பார்மட் போட்டிக்கு என்னை தனியாக தயார் செய்தேன். மொத்தம் 20 ஆயிரம் பந்துகளை எனக்கு போட்டு பயிற்சி கொடுத்தார் என் பயிற்சியாளர், என்று சஞ்சு கூறியுள்ளார். தினேஷ் கார்த்திக்கும் வயது அதிகரிக்கிறது என்பதால், தினமும் 5 மணி நேரத்திற்கும் மேல் கடுமையாக பயிற்சி செய்து வருகிறார்.
கால்பந்து போட்டி
கிரிக்கெட் என்பது கால்பந்து போல கிடையாது. இதில் ரெஸ்ட் எடுத்து கூட ஆடலாம். நிறைய பிரேக் கிடைக்கும். பல நேரம் எதுவும் செய்யாமல், வெறுமனே பீல்டிங் செய்ய முடியும். கிரிக்கெட்டில் உடல் பிட்னஸ் அவ்வளவு முக்கியம் இல்லை என்றும் இன்னொரு தரப்பு கூறுகிறது. சின்ன தொப்பை இருப்பதில் தவறு இல்லை. தொப்பை இருக்கும் ரோஹித் மாஸ் பேட்டிங் செய்வதும், சிக்ஸ் பேக் வைத்திருக்கும் கோலி கேட்ச் மிஸ் செய்வதுமே இதற்கு உதாரணம் என்கிறார்கள்.
என்ன அறிவுறுத்தல்
ஒவ்வொரு வீரரும் அவர்களுக்கு தகுந்த உடல் தகுதியை பெற்று இருக்க வேண்டும். தொப்பை இருப்பதில் தவறு இல்லை. ஆனால் அது அவர்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். மிக முக்கியமாக அவரின் உடல் ஷேப் காயங்கள் ஏற்படாத வகையில் ஒத்துழைக்க வேண்டும். டி20 போட்டியில் கூடுதல் வேகம், பிட்னஸ் அவசியம்தான். மற்றபடி குட்டி தொப்பை இருப்பதில் தவறு இல்லை என்று கூறுகிறார்கள்.. மொத்தத்தில் வீரர்கள் தங்களுக்கு ஏற்ற, தங்கள் ஆட்டத்தை பாதிக்காத பிட்னஸை கொண்டு இருக்க வேண்டும் என்று வல்லுநர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.