அணியில் வாய்ப்பு
கடந்த மூன்று வருடங்களாக சூர்ய குமார் யாதவ் மிகவும் சிறப்பாக ஐபிஎல் போட்டிகளில் ஆடி வருகிறார். அதேபோல் டொமஸ்டிக் ஆட்டங்களிலும் இவர் சிறப்பாக ஆடி வருகிறார். பல முறை களத்தில் இவர் தனது திறமையை நிரூபித்தாலும் கூட தொடர்ந்து இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது.
வாய்ப்பு மறுப்பு
இந்த நிலையில் சூர்ய குமார் யாதவிற்கு இந்த முறையும் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. இதை கவாஸ்கர் தொடங்கி ஹர்பஜன் வரை பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் திலீப் வெங்சர்க்கார் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், சூர்ய குமார் யாதவை இந்திய அணியில் எடுத்திருக்க வேண்டும்.
ஏன் புறக்கணிப்பு
அவரை ஏன் தொடர்ந்து இப்படி புறக்கணிக்கிறார்கள் என்று தெரியவில்லை. தற்போது வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் வீரர்களில் இவர்தான் மிகவும் திறமையான வீரர். ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் உள்ள சில வீரர்களை விட சூர்ய குமார் யாதவ் மிகவும் சிறப்பாக ஆட கூடியவர். அவரை ஏன் எடுக்கவில்லை.
எப்படி திறமை
அவர் தொடர்ச்சியாக நிறைய போட்டிகளில் சிறப்பாக ஆடி வருகிறார். இந்திய அணியில் இடம் பிடிக்க அவர் இன்னும் என்ன செய்ய வேண்டும் என்றே தெரியவில்லை. ஒரு வீரர் 26-34 வயதிற்குள்தான் சிறப்பாக ஆட முடியும். சூர்ய குமார் 30 வயதில் இருக்கிறார். அவருக்கு இப்போதாவது வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
என்ன காரணம்
எந்த அடிப்படையில் அவரை புறக்கணிக்கிறார்கள். அணியில் ரோஹித் சர்மா இடம்பெறவில்லை. அப்படி இருக்கும் போது சூர்ய குமார் யாதவை எடுக்காதது தவறு. சூர்ய குமார் அணியில் இடம்பெற்று இருந்தால் இந்திய அணி வலிமையாக இருந்திருக்கும். கங்குலி இதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க கூடாது. இதை உடனே அவர் விசாரிக்க வேண்டும், என்று திலீப் வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார்.