என்ன நடந்தது
ஆனால் இந்த சீசனில் கொல்கத்தா அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் தொடக்கத்தில் நன்றாகவே ஆடினார். நினைத்து பார்த்ததை விட சிறப்பாகவே தினேஷ் கார்த்திக் கேப்டன்சி செய்து வந்தார். தினேஷ் கார்த்திக் மொத்தம் 7 போட்டிகளில் கேப்டன் பதவி வகித்தார். இதில் 4 போட்டிகளில் கொல்கத்தா அணி வென்றது.
ஆனால் என்ன
அதிலும் வெற்றிபெற வாய்ப்பே இல்லாத போட்டிகளில் கூட கொல்கத்தா வெற்றிபெற்றது . அதிலும் சிஎஸ்கே அணிக்கு எதிரான வெற்றி எல்லாம் கொஞ்சம் கூட கணிக்க முடியாத அளவிற்கு இருந்தது. தினேஷ் கார்த்திக்கின் ஸ்மார்ட் கேப்டன்சி இந்த தொடரில் பெரிய அளவில் பாராட்டப்பட்டது.
பாராட்டுக்கள்
இந்த நிலையில்தான் திடீர் என்று கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியில் இருந்து தினேஷ் கார்த்திக் ராஜினாமா செய்தார். இதனால் அணியின் கேப்டனாக இயான் மோர்கன் நியமிக்கப்பட்டார். தனிப்பட்ட வகையில் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என்று தினேஷ் கார்த்திக் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் ராஜினாமாவிற்கு பிறகுதான் தினேஷ் கார்த்திக் மிக மோசமாக ஆடி உள்ளார்.
எத்தனை
அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின் தினேஷ் கார்த்திக் நான்கு போட்டிகளில் எடுத்த ரன்கள் 4, 29, 4, 3... வரிசையாக அடுத்தடுத்த போட்டிகளில் தினேஷ் கார்த்திக் மோசமாக சொதப்பி உள்ளார். இதனால் தினேஷ் கார்த்திக்கின் கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த காரணத்தால் தினேஷ் கார்த்திக் இவ்வளவு நாள் அணிக்குள் இருந்தார்.
ஆனால் நீக்கம்
ஆனால் இனி அவர் கேப்டன் இல்லை. அணி நிர்வாகம் நினைத்தால் அவரை இந்த வருடத்தோடு அணியில் இருந்து தூக்க முடியும். தினேஷ் காரத்திக்கிற்கு இந்திய அணியிலும் பெரிய அளவில் பிரகாசமான வாய்ப்பு இல்லை. இப்போது ஐபிஎல்லில்லும் மோசமாக சொதப்பி வருகிறார்.
கெரியர்
நிறைய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் இந்த முறை சிறப்பாக ஆடி உள்ளனர். கே.எல் ராகுல், பண்ட், இஷான் கிஷான் என்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடி வருகிறார்கள். தினேஷ் கார்த்திக்கை காத்து வந்த கேப்டன் பதவியும் இப்போது அவரிடம் இல்லை. இதனால் அவசரப்பட்டு தினேஷ் கார்த்திக் கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிட்டாரா என்று கேள்வி எழுந்துள்ளது.