மும்பை இந்தியன்ஸ் ஆட்டம்
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சுமாராக பந்து வீசியது. மும்பை அணியில் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் அதிரடி ஆட்டம் ஆடி ரன் குவித்தனர். அந்த அணி 20 ஓவர்களில் 195 ரன்கள் குவித்தது.
பாட் கம்மின்ஸ்
கொல்கத்தா அணியில் பாட் கம்மின்ஸ் மிக மோசமாக பந்து வீசி இருந்தார். அவர் 3 ஓவர்களில் 49 ரன்கள் கொடுத்து இருந்தார். அவரது மோசமான பந்துவீச்சால் மும்பை அணி எளிதாக ரன் குவித்தது. அடுத்து கொல்கத்தா அணி இமாலய இலக்கை நோக்கி ஆடியது.
பேட்டிங் சரிவு
கொல்கத்தா அணியின் பேட்டிங்கும் சரியாக அமையவில்லை. எந்த வீரரும் நிலைத்து நின்று ஆடவில்லை. ரஸ்ஸல், இயான் மார்கன் போன்ற ஸ்பெஷலிஸ்ட் அதிரடி பேட்ஸ்மேன்கள் கூட அதிரடி ஆட்டம் ஆட முடியாமல் திணறி ஆட்டமிழந்தனர்.
விமர்சனம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 49 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அந்த அணியில் பல நட்சத்திர வீரர்கள் இருந்தும் தோல்வி ஏற்பட்டுள்ளதால் கடும் விமர்சனம் எழுந்தது. அதிக ரன்கள் வாரி இறைத்த பாட் கம்மின்ஸ் குறித்தும் கேள்வி எழுந்தது.
தினேஷ் கார்த்திக் விளக்கம்
இந்த நிலையில் போட்டி முடிந்த உடன் கேப்டன் தினேஷ் கார்த்திக், பாட் கம்மின்ஸ்-க்கு ஆதரவாக பேசினார். குவாரன்டைனில் இருந்து சில மணி நேரங்களுக்கு முன்பே வெளியே வந்த பாட் கம்மின்ஸ்-ஐ விமர்சனம் செய்வது நியாயமில்லை என்றார் அவர்.
உள்ளூர் நேரப்படி 6 மணிக்கு துவங்கும் போட்டிக்கு 3.34 மணிக்கு தான் பாட் கம்மின்ஸ் ஆடலாம் என அனுமதி கிடைத்ததாக ஒரு முக்கிய தகவலைக் கூறினார் தினேஷ் கார்த்திக். அதனால், கம்மின்ஸ் பயிற்சி இன்றி ஆடியதாக அவரது செயல்பாட்டுக்கு விளக்கம் அளித்தார்.
ஏன் அணியில் வாய்ப்பு?
ஆனால், ஏன் பயிற்சியே இல்லாத வீரருக்கு அணியில் வாய்ப்பு அளிக்க வேண்டும். ஒரு போட்டிக்கு மட்டும் அவருக்கு ஓய்வு அளித்து நல்ல பயிற்சி கிடைத்த பின் ஆட வைத்திருக்கலாமே என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது தினேஷ் கார்த்திக் செய்த கேப்டன்சி சொதப்பல் தான். அதை அவரே சொல்லி ஒப்புக் கொண்டுள்ளார் என்பது தான் உண்மை.