சிஎஸ்கே நிலை
2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மிக மோசமான நிலையில் உள்ளது. லீக் சுற்றில் 10 போட்டிகளில் ஆடி 3 வெற்றிகள் மட்டுமே பெற்றுள்ளது. புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. பிளே-ஆஃப் செல்ல போராடும் திட்டத்தை கூட கை விட்டு விட்டது சிஎஸ்கே.
ரெய்னா, ஹர்பஜன் விலகல்
சிஎஸ்கே அணியின் இந்த மோசமான நிலைக்கு முக்கிய காரணம் முக்கிய வீரர்கள் இருவர் ஐபிஎல் தொடர் துவங்கும் முன்பே விலகியது தான். சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் இருவரும் ஐபிஎல் தொடர் துவங்கும் முன்பே விலகினர். அவர்களுக்கு மாற்று வீரர்களையும் சிஎஸ்கே அணி கோரவில்லை.
பிராவோ காயம்
இந்த நிலையில், தொடரில் துவக்கத்தில் காயத்தால் சில போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார் டிவைன் பிராவோ. பின் சிஎஸ்கே அணி மோசமாக ஆடி தோல்விகள் அடைந்த பின் அணியில் சேர்க்கப்பட்டார். பிராவோ வந்த பின் பந்துவீச்சு பலம் அடைந்தது.
டெல்லி போட்டி
ஆனாலும், சிஎஸ்கே அணி தொடரில் தொடர்ந்து தோல்விகள் அடைந்து வந்தது. இதற்கிடையே பிராவோ டெல்லி போட்டியில் காயத்தால் பாதியில் விலகினார். அவர் கடைசி ஓவரில் பந்து வீச முடியாததால் அந்த போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது.
தொடரில் இருந்து விலகல்
பிராவோவின் காயம் மோசமாக இருப்பதை அடுத்து அவர் இனி சில வாரங்களுக்கு போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் 2020 ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார். சிஎஸ்கே அணியில் இருந்து இந்த சீசனில் விலகும் மூன்றாவது வீரர் ஆவார் பிராவோ.
என்ன சொன்னார்?
தான் விலகியதை அடுத்து அவர் வெளியிட்ட வீடியோவில் ரசிகர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். "இது வருத்தமான செய்தி. என் அணி சிஎஸ்கேவை விட்டு விலகுவது வருத்தமாக உள்ளது. நம் சிஎஸ்கே ரசிகர்கள் அணியை தொடர்ந்து ஆதரிக்க வேண்டும்" என்றார் பிராவோ.
உருக்கமான பேச்சு
மேலும், "இந்த சீசன் நாங்கள் எதிர்பார்த்தது போல அமையவில்லை. நம் ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவும் எதுவும் நடக்கவில்லை. நாங்கள் எங்கள் சிறப்பான பங்களிப்பை அளித்தோம். ஆனாலும், அது முடிவில் பிரதிபலிக்கவில்லை" என உருக்கமாக பேசினார் பிராவோ. அவரது பதிவின் கீழ் ரசிகர்கள் கண்ணீர் விடும் ஈமோஜிக்களை பதிவிட்டு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
மாற்று வீரர் தேர்வு செய்யுமா சிஎஸ்கே?
சிஎஸ்கே அணி பிராவோவுக்கு மாற்று வீரரை தேர்வு செய்யுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சிஎஸ்கே அணியின் தலைமைசெயல் அதிகாரி காசி விஸ்வநாதன் சிஎஸ்கே அணி மாற்று வீரரை தேர்வு செய்யப் போவதில்லை என கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.