எலிமினேட்டர் போட்டி
பிளே-ஆஃப் சுற்றில் எலிமினேட்டர் போட்டியில் ஹைதராபாத் அணியிடம் தோல்வி அடைந்து தொடரை விட்டே வெளியேறியது. இந்தப் போட்டியில் அந்த அணி தோற்க கேப்டன் கோலி செய்த சில விஷயங்கள் தான் என கூறப்படுகிறது.
டாஸ் தோல்வி
இந்தப் போட்டியில் பெங்களூர் அணி டாஸில் தோல்வி அடைந்தது, ஆனாலும், அந்த அணிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை. டாஸில் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது.
பனிப்பொழிவு
போட்டியின் பின்பாதியில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் அந்த முடிவை எடுத்தது. ஆனால், போட்டியில் அப்படி பனிப்பொழிவு ஏற்படவில்லை. எனவே, அந்த வகையில் பெங்களூர் அணிக்கு சாதகமாகவே இருந்தது டாஸ். ஆனாலும், பெங்களூர் அணி எங்கே சறுக்கியது?
நான்கு வீரர்கள் மாற்றம்
பிளே-ஆஃப் சுற்றுக்கு முன் லீக் சுற்றில் பெங்களூர் அணி கடைசி நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்து இருந்தது. அந்தப் போட்டிகளின் தோல்வியால் திடீரென இந்தப் போட்டியில் அணியில் நான்கு வீரர்களை மாற்றினார் கேப்டன் கோலி.
மாற்றம் தேவையா?
இந்த ஐபிஎல் சீசனில் வெற்றியோ, தோல்வியோ அதிகம் அணியை மாற்றாமல் ஒரே அணியுடன் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி தான் கடைசி வரை ஆதிக்கம் செலுத்தி உள்ளது. அதற்கு மாறாக செயல்பட்ட அணிகள் தோல்வி அடைந்து தடுமாறிய நிலையில், முக்கிய போட்டிக்கு முன் அணியில் நான்கு வீரர்களை மாற்றியது அணி வீரர்களின் நம்பிக்கையை பாதிக்கும் செயலாக இருந்தது.
தாக்கம் இல்லை
ஜோஷ் பிலிப்புக்கு பதில் வந்த ஆரோன் பின்ச் பெரிதாக எந்த முன்னேற்றத்தையும் காட்டவில்லை. மொயீன் அலி, நவ்தீப் சைனி ஆகியோரும் இந்தப் போட்டியில் வாய்ப்பு கிடைத்தாலும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
ஜாம்பா மட்டுமே பயன்
சுழற் பந்துவீச்சாளர் ஆடம் ஜாம்பா மட்டுமே சிறப்பாக ஆடி 4 ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார். அவர் மட்டுமே அணியில் சேர்க்கப்பட்ட நால்வரில் அணிக்கு பயன் அளித்தார். ஹைதராபாத் அணிக்கு கடும் அழுத்தம் கொடுத்தார்.
பேட்டிங் ஆர்டர் மாற்றம்
அணி மாற்றம் சொதப்பிய நிலையில், பெங்களூர் அணியின் பேட்டிங் ஆர்டர் மாற்றமும் மோசமாக சொதப்பியது. இந்த சீசனில் மூன்றாம் வரிசையில் இறங்கி வந்த கோலி, இந்தப் போட்டியில் துவக்க வீரராக இறங்கினார். துவக்க வீரராக ஆடி வந்த பின்ச், மூன்றாம் வரிசையில் ஆடினார்.
சாதகமான சூழல்
இதில் கோலி 6 ரன்களில் ஆட்டமிழந்தார். முக்கிய விக்கெட் முதலிலேயே வீழ்ந்ததால் பெங்களூர் அணிக்கு அழுத்தம் ஏற்பட்டது. அந்த அணி 20 ஓவர்களில் 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. இது குறைந்த ஸ்கோர் தான். அடுத்து பந்துவீச்சின் போது அந்த அணிக்கு சாதகமான சூழல் ஏற்பட்டது.
20 ரன்கள் குறைவு
பனிப்பொழிவு இல்லாததால் சுழற் பந்துவீச்சு வேலை செய்தது. சாஹல் மற்றும் ஜாம்பா சுழற் பந்துவீச்சால் ஹைதரபாத் அணியை கட்டுப்படுத்திய போதும், 131 ரன்கள் எடுத்த பெங்களூர் அணியால் அதை வைத்து வெற்றி பெற முடியவில்லை. 150 ரன்கள் எடுத்து இருக்கும் பட்சத்தில் அந்த அணி வெற்றி பெற்று இருக்கக் கூடும்.