சுவாரஸ்யத்தை குறைக்கும் போட்டிகள்
கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச அளவில் கிரிக்கெட் போட்டிகள் முடங்கிய நிலையில், காலி மைதானங்களில் போட்டிகள் மீண்டும் துவங்கி நடத்தப்பட்டு வருகின்றனர். ரசிகர்கள் இல்லாத மைதானங்களில் விளையாடுவது போட்டிகளின் சுவாரஸ்யத்தை குறைக்கவே செய்கிறது என்றாலும் தற்போதைய சூழலில் அந்த அளவிலாவது கிரிக்கெட் போட்டிகளை காண முடிவது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆறுதல்.
அதிகமான டிவி ரேட்டிங்
கடந்த 5 மாதங்களாக ஒத்தி வைக்கப்பட்டுள்ள ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக யூஏஇயில் நடத்தப்பட உள்ளன. வரும் 19ம் தேதி முதல் துவங்கவுள்ள இந்த போட்டிகள் காலி மைதானங்களில்தான்நடத்தப்பட உள்ளன. இந்நிலையில் இந்த போட்டிகள் டிவிக்களில் மட்டுமே ஒளிப்பரப்பப்பட உள்ளதால் அதிகமான ரேட்டிங்கை பெறும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளுக்கான காரணம்
ஆன்லைனில் நடத்தப்பட்ட லெக்சர் ஒன்றில் பங்கேற்ற சவுரவ் கங்குலி கொரோனாவால் அதிகமான கலவரத்திற்கு உள்ளாகியுள்ள ரசிகர்களை இயல்புநிலைக்கு கொண்டுவரவே ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். ரசிகர்களின் விருப்பத்திற்குரிய ஐபிஎல் போட்டிகளை இந்த முறை டிவிக்களில் மட்டுமே காண முடியும். அதனால் ஒளிபரப்பாளர்கள் அதிகப்படியான ரேட்டிங் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதிக்கட்ட போட்டிகளில் ரசிகர்கள்
தற்போதைய சூழலில் ரசிகர்களை மைதானத்தில் அனுமதிப்பது மிகவும் ரிஸ்க்கானது என்று கூறியுள்ள கங்குலி, கொரோனா பாதிப்பு மட்டுப்படும் சூழலில் ஐபிஎல்லின் இறுதிக்கட்ட போட்டிகளில் 30 சதவிகித ரசிகர்களை கொரோனா பரிசோதனைக்கு பிறகு மைதானத்தில் அனுமதிக்கவும் திட்டமிடப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.