இறுதிப் போட்டி
2020 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் நடைபெற்றது. இந்த இறுதிப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி டாஸ் வென்றது. அந்த அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் 3 விக்கெட்களை 22 ரன்களுக்கு இழந்த டெல்லி பின் தடுமாறி 156 ரன்கள் குவித்தது.
தெறிக்கவிட்ட பந்துவீச்சு
மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. ட்ரென்ட் போல்ட் 3 விக்கெட் வீழ்த்தி டெல்லி அணியின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். அடுத்து 157 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கியது மும்பை அணி.
சேஸிங்
ரோஹித் சர்மா - க்விண்டன் டி காக் துவக்கம் அளித்தனர். இதுவரை ரோஹித் சர்மா இந்த தொடரில் சில போட்டிகளிலேயே ரன் குவித்து இருந்தார். கடைசி இரு போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றி இருந்தார். அதனால் அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
ரோஹித் அபாரம்
இறுதிப் போட்டியில் ரோஹித் சர்மா அபாரமாக ஆடினார். டி காக் 20 ரன்கள் எடுத்து வெளியேறிய நிலையில் அவர் அதிரடி ஆட்டத்தால் வேகமாக ரன் சேர்த்து வந்தார். அவருடன் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்து வந்தார். ரன் ரேட் 9ஐ ஒட்டி இருந்தது. அப்போது தான் அந்த குழப்பம் ஏற்பட்டது.
சூர்யகுமார் யாதவ் என்ன செய்தார்?
11வது ஓவரின் ஐந்தாவது பந்தை ரோஹித் தட்டி விட்டு ஒரு ரன் ஓடி வருமாறு சூர்யகுமார் யாதவ்வை அழைத்தார். ஆனால், அங்கே ரன் ஓட முடியாது என டெல்லி வீரர்கள் பந்தை பிடித்து விட்டதை சுட்டிக் காட்டி நின்று விட்டார் சூர்யகுமார்.
தியாகம்
அதே சமயம் ரோஹித் சர்மா மறுமுனைக்கு ஓடி வந்து விட்டார். இரண்டு பேட்ஸ்மேன்களும் ஒரே இடத்தில் நிற்க, ஸ்ட்ரைக்கர் முனையில் பந்தை எடுத்து ரன் அவுட் செய்தது டெல்லி. அப்போது தன் விக்கெட்டை தியாகம் செய்ய முடிவெடுத்த சூர்யகுமார் ஸ்ட்ரைக்கர் முனையை நோக்கி ஓடினார்.
போட்டியில் வெற்றி
சூர்யகுமார் 20 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். இந்த சீசனில் அவர் நல்ல பார்மில் இருந்த போதும், இறுதிப் போட்டியில் சிறப்பாக ஆடி வந்த ரோஹித் சர்மாவுக்காக தன் விக்கெட்டை தியாகம் செய்தார். அதன் பின் சிறப்பாக ஆடிய ரோஹித் 68 ரன்கள் எடுத்தார். மும்பை அணி வெற்றி பெற்றது.
என்ன சொன்னார்கள்?
போட்டிக்கு பின் பேசிய சூர்யகுமார் இந்த ரன் அவுட் பற்றி பேசுகையில், தன் கேப்டனுக்காக விக்கெட்டை தியாகம் செய்வதில் மகிழ்ச்சி என்றார். அதே போல, ரோஹித் சர்மா பேசுகையில் சூர்யகுமார் நல்ல பார்மில் இருந்த நிலையில் நான் தான் விக்கெட்டை தியாகம் செய்து இருக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
ரசிகர்கள் உருக்கம்
சூர்யகுமார் யாதவ் செய்த தியாகம் மற்றும் அதனை அவர் மகிழ்ச்சியாக எடுத்துக் கொண்டது ஆகியவற்றை சுட்டிக் காட்டி மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் அவரை பாராட்டி உருகி வருகின்றனர். மும்பை கோப்பை வென்றது. சூர்யகுமார் யாதவ் எங்கள் இதயத்தை வென்றார் என உருக்கமான பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.