என்ன நடந்தது?
2019 ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணி ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராக இருந்தும், கங்குலி ஆலோசகராக இருந்தும் பிளே-ஆஃப் வரை மட்டுமே முன்னேறியது. அடுத்த சீசனில் எப்படியும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என அந்த அணி அப்போதே சிந்தித்தது.
கங்குலி போட்டுக் கொடுத்த திட்டம்
கங்குலி பிசிசிஐ தலைவராகும் முன் ஐபிஎல் வீரர்களை அணி மாற்றம் செய்யும் பணிகளில் அணிகள் ஈடுபட்டு இருந்தன. அப்போது நல்ல வீரர்களை டெல்லி அணிக்கு மாற்றி விட கங்குலி திட்டமிட்டார். அஸ்வின், ரஹானேவுக்கு குறி வைத்தார்.
அஸ்வின், ரஹானே
பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த அஸ்வின் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்து பதவி பறிக்கப்பட்ட ரஹானே இருவர் மீதும் அவர்களின் ஐபிஎல் அணிகள் அதிருப்தியில் இருந்தன. அனுபவ வீரர்களான அவர்களை டெல்லி அணிக்கு மாற்ற காய் நகர்த்தி வெற்றி கண்டார் கங்குலி.
மும்பை அணியின் நப்பாசை
அவர்களை அணி மாற்றம் செய்ய சில வீரர்களையும் கொடுத்து இருந்தது டெல்லி அணி. அஸ்வின், ரஹானேவுக்கு கூடுதல் சம்பளம் அளிக்க வேண்டும் என்பதால் அந்த தொகையை ஈடுகட்ட என்ன செய்யலாம் என டெல்லி அணி யோசித்த போது, மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி அணி சரியாக பயன்படுத்தாத வீரரை வாங்க நப்பாசைப்பட்டது.
காசு கொடுத்ததாக தகவல்
பொதுவாக அணி மாற்றத்தில் இரு அணிகளும் வீரர்களை மாற்றிக் கொள்வார்கள். கூடுதலாக மட்டுமே பணம் கொடுக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், மும்பை அணி எந்த வீரரையும் கொடுக்காமல் ட்ரென்ட் போல்ட்டை தங்கள் அணிக்கு மாற்றியது. அப்போதே மும்பை அணி ட்ரென்ட் போல்ட்டின் ஏலத் தொகை மற்றும் கூடுதல் தொகை கொடுத்து அவரை வாங்கி இருப்பதாக தகவல் கசிந்தது.
சரியாக பயன்படுத்திய போல்ட்
புதிய பந்தை ஸ்விங் செய்வதில் உலகின் சிறந்த பந்துவீச்சாளர் ட்ரென்ட் போல்ட் தான். அவரை முதல் ஓவரை வீச வைத்த மும்பை இந்தியன்ஸ் அணி அதன் மூலம் பலனை கண்டது. போல்ட் எட்டு போட்டிகளில் முதல் ஓவரில் விக்கெட் வீழ்த்தி மிரட்டினார்.
வேட்டு வைத்த போல்ட்
இதில் அதிகம் அடி வாங்கியது அவரது முன்னாள் அணியான டெல்லி கேபிடல்ஸ் தான். லீக் போட்டிகளில் இரண்டு முறையும் டெல்லி அணியின் முதல் விக்கெட்டை தான் வீசிய முதல் ஓவரிலேயே வீழ்த்தினார். அடுத்து பிளே-ஆஃப் சுற்றில் முதல் ஓவரில் ரன்னே கொடுக்காமல் 2 விக்கெட்கள் வீழ்த்தி டெல்லி அணிக்கு வேட்டு வைத்தார்.
இறுதிப் போட்டியில் அதிர்ச்சி
இறுதிப் போட்டியில் அதே டெல்லி அணியை சந்தித்த போது ட்ரென்ட் போல்ட் காயத்துடன் ஆடினார். அதை எல்லாம் பொருட்படுத்தாமல் முதல் விக்கெட்டாக மார்கஸ் ஸ்டோய்னிஸ்-ஐ முதல் பந்திலேயே வீழ்த்தி டெல்லி அணிக்கு அதிர்ச்சி அளித்தார்.
தோல்வி
இறுதிப் போட்டியில் ட்ரென்ட் போல்ட் டெல்லி அணியின் மூன்று முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார். 156 ரன்கள் மட்டுமே எடுத்தது டெல்லி. மும்பை அணி இந்த இலக்கை 18.4 ஓவரில் எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் கோப்பையை தட்டிச் சென்றது.
ஐபிஎல் அணிகளுக்கு பாடம்
டெல்லி அணி நல்ல வீரரை சரியாக பயன்படுத்தத் தெரியாமல், காசுக்கு ஆசைப்பட்டு சிறந்த அணியிடம் தாரை வார்த்து அவராலேயே அடுத்த சீசனில் தோல்வி அடைந்தது மற்ற ஐபிஎல் அணிகளுக்கு நல்ல பாடமாக அமைந்துள்ளது.