ஏமாற்றி உள்ளார்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே அதிக நம்பிக்கை வைத்து மேக்ஸ்வெல்லை தேர்வு செய்து இருந்தார். ஆனால், அவர் முற்றிலும் ஏமாற்றி உள்ளார். பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் அவரது செயல்பாடு படுமோசமாக உள்ளது.
கிளென் மேக்ஸ்வெல்
ஆஸ்திரேலிய அதிரடி ஆல் - ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் கிரிக்கெட் உலகின் முக்கிய வீரர். அதில் சந்தேகமே இல்லை. ஆனால், அவரது சமீபத்திய செயல்பாடுகள் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. 2020 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி அவரை முக்கிய வீரராக அணியில் ஆட வைத்தாலும், அவர் மோசமாக செயல்பட்டு வருகிறார்.
கடந்த காலம்
இதற்கு முன் 2014-இல் சில ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த போது கிளென் மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டம் ஆடி அதிக ரன் குவித்தார். அதே போல இந்த முறை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் அவர் செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
நம்பிக்கை
அவர் மீது பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே அதிக நம்பிக்கை வைத்தார். மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்ய தேர்வு செய்தார். பந்துவீச்சிலும் அவரை தொடர்ந்து பயன்படுத்தினார். ஆனாலும், அவர் இதுவரை ஆடிய 9 போட்டிகளில் ஒரு முறை கூட சிறப்பாக செயல்படவில்லை.
தொடர் வாய்ப்பு
அவர் அணிக்கு எந்த வகையிலும் உதவாத போதும் அவரது திறமை மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு அளித்து வந்தார் அனில் கும்ப்ளே. மேக்ஸ்வெல் மீது விமர்சனம் எழுந்த போதும் அவரை ஆதரித்தார்.
மோசமான செயல்பாடு
மேக்ஸ்வெல் 9 போட்டிகளில் 63 பந்துகளை சந்தித்து 58 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 92.06 மட்டுமே. பந்துவீச்சில் 90 பந்துகள் வீசி 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தி உள்ளார். பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மோசமாகவே செயல்பட்டுள்ளார்.
பஞ்சாப் அணி நிலை
மேக்ஸ்வெல் மோசமாக ஆடி வரும் நிலையில், பஞ்சாப் அணியும் பரிதாபமான நிலையில் தான் உள்ளது. லீக் சுற்றில் 9 போட்டிகளில் பஞ்சாப் அணி 3 வெற்றிகளை மட்டுமே பெற்று ஏழாம் இடத்தில் உள்ளது. அந்த அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பு இன்னும் முடிந்துவிடவில்லை என்பது மட்டுமே ஒரே ஆறுதல்.
பெரும் ஏமாற்றம்
மேக்ஸ்வெல் 9 போட்டிகளிலும் வாய்ப்பு பெற்றுள்ளார். ஆனாலும், பெரும் ஏமாற்றம் அளித்துள்ளார். இனி வரும் போட்டிகளில் அவர் அணியில் இருந்து நீக்கப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பஞ்சாப் அணி அவரை 10.75 கோடி கொடுத்து வாங்கியது தவறான முடிவா? என்ற விவாதம் நடைபெற்று வருகிறது.