விறுவிறுப்பான அனுபவம்
ஐபிஎல் 2020 தொடர் கடந்த மாதம் 19ம் தேதி துவங்கி தொடர்ந்து 40 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. பரபரப்பான ஆட்டங்கள் ரசிகர்களை டிவி பெட்டியின் முன்பு கட்டிப் போட்டுள்ளது. நேரில் சென்று போட்டிகளை பார்க்க முடியாத குறை ஒன்று மட்டுமே அவர்களுக்கு உள்ளது. மற்றபடி உற்சாகத்துக்கு குறை வைக்கவில்லை இந்த ஆண்டு ஐபிஎல்.
மாறுபட்ட ஐபிஎல்
கடந்த சீசனில் சிறப்பாக விளையாடிய அணிகள் இந்த ஆண்டு ஐபிஎல் 2020 புள்ளிகள் பட்டியலில் இறுதியில் உள்ளன. இதேபோல கடந்த ஆண்டு சொதப்பிய அணிகள் தற்போது வீறுகொண்டு எழுந்து முன்னணியில் உள்ளன. மொத்தத்தில் ஆச்சர்யங்களுக்கு குறைவில்லாமல் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சவுரவ் கங்குலி மகிழ்ச்சி
பிளே ஆப் சுற்றுகளுக்கு எந்த அணி செல்லும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் அதிரடியாக வெற்றி அடைந்துள்ளதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்சின் கிரிக்கெட் லைவ் நிகழ்ச்சிக்காக பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
உலகிலேயே சிறந்த தொடர்
இந்த வெற்றி தனக்கு எந்த ஆச்சர்யத்தையும் அளிக்கவில்லை என்றும், உலகிலேயே மிகவும் சிறந்த தொடர் ஐபிஎல் என்றும் கங்குலி மேலும் கூறினார். அனைவரின் வாழ்க்கையிலும் இயல்புநிலையை தாங்கள் கொண்டுவர விரும்பியதாகவும் அதனால் ஐபிஎல் தொடரை கொண்டுவந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அதிகரித்துள்ள ரேட்டிங்
இந்த ஆண்டு சூப்பர் ஓவர்கள், ஷிகர், ரோகித்தின் பேட்டிங், போன்றவையும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல் போன்ற இளம் வீரர்களின் அதிரடி ஆட்டம் போன்றவையும் ஐபிஎல்லின் மூலம் கிடைத்துள்ளது. ரேட்டிங் மூலம் இந்த ஆண்டு ஐபிஎல் அதிரடி வெற்றி பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.