முதல்முறையாக கேப்டன்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக கடந்த சீசன்களில் விளையாடியுள்ள இந்திய அணியின் விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான கே.எல். ராகுல் இந்த சீசனில் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். முதல்முறையாக ஐபிஎல் போட்டிகளில் இவர் தன்னுடைய கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளதால் அவருடைய செயல்பாடுகளை பார்க்க ரசிகர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் காத்திருக்கின்றனர்.
அவர்களின்கீழ் விளையாடுவது சிறப்பு
இந்நிலையில் தான் ஐபிஎல் கேப்டன்கள் விராட் கோலி, எம்எஸ் தோனி மற்றும் ரோகித் சர்மா போன்றவர்களிடம் இருந்து தலைமை பண்புகளை கற்றுக்கொள்ள விரும்புவதாக கே.எல் ராகுல் தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஐபிஎல்லில் விளையாடிவரும் அவர்களின்கீழ் விளையாடுவதும் கற்றுக் கொள்வதும் சிறப்பானது என்றும் ராகுல் தெரிவித்துள்ளார்.
அணியை வழிநடத்துவதில் ஒற்றுமை
விராட் கோலி மற்றும் எம்எஸ் தோனி இருவரும் ஒருவருக்கொருவர் முற்றிலும் வித்தியாசமான கேப்டன்கள் என்று கூறியுள்ள ராகுல், ஆனால் அவர்கள் இருவரும் எப்போதுமே வெற்றி பெறும் விருப்பம் மற்றும் அதற்கென அணியை வழிநடத்துவதில் ஒற்றுமையானவர்கள் என்றும் கூறியுள்ளார். இதே வழிமுறையைதான் தான் கடைபிடிக்க விரும்புவதாகவும் அணியை முன்னிருந்து வழிநடத்த விரும்புவதாகவும் ராகுல் மேலும் கூறினார்.
யாராலும் எப்போதும் முடியாது
மேலும் ரோகித் சர்மா மற்றும் கேன் வில்லியம்சன் போன்றவர்களையும் தான் பின்பற்ற விரும்புவதாகவும் கூறினார் கே.எல். ராகுல். அணியில் தோனிக்கு அடுத்த விக்கெட் கீப்பராக பார்க்கப்படுகிறார் ராகுல். இந்நிலையில் தோனியின் இடத்தை நிரப்புவது யாராலும் எப்போதும் இயலாத காரியம் என்றும் கே.எல். ராகுல் தெரிவித்துள்ளார்.