2வது வெற்றிக்கு சிஎஸ்கே காத்திருப்பு
ஐபிஎல் தொடர் கடந்த 19ம் தேதி யூஏஇயில் துவங்கி நடைபெற்று வருகிறது. தொடரின் 4வது போட்டியாக ஷார்ஜாவில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையில் போட்டி நடைபெறவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ள சிஎஸ்கே அணி இந்த போட்டியின்மூலம் இரண்டாவது வெற்றியை சுவைக்க காத்திருக்கிறது.
விளையாடுவது சிறப்பானது
இதேபோல தொடரில் தன்னுடைய முதல் போட்டியில் வெற்றிபெற ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் காத்திருக்கிறது. இந்நிலையில் சிஎஸ்கேவிற்கு எதிராக விளையாடவது மிகவும் சிறப்பானது என்று செய்தியாளர்களுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெளியிட்டுள்ள அறிக்கைமூலம் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
வலிமையாக மாறியுள்ளது
கடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்னதாக மேற்கொண்ட நெட் பயிற்சியில் தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவர்கள் ஆலோசனையின்பேரில் அந்த தொடரில் விளையாடாமல் ஓய்வு பெற்ற ஸ்மித், தற்போது ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்காக யூஏஇயில் உள்ளார். இந்நிலையில் கடந்த சீசனை விட இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பல்வேறு தளங்களிலும் தன்னை வலிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
சிறப்பான துவக்கம்
மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல்லில் மிகவும் வலிமையான அணிகளாக உள்ளதாக தெரிவித்துள்ள ஸ்டீவ் ஸ்மித், வலிமையான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் சிறப்பாக விளையாடி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முதல் போட்டியை சிறப்பாக துவக்கி வைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.