சூர்ய குமார் யாதவ்
நேற்று மும்பை அணியில் பேட்ஸ்மேன்கள் யாரும் பெரிதாக ஆடாத நிலையில் சூர்ய குமார் யாதவ் மட்டும் உறுதியாக களத்தில் நின்று அதிரடி காட்டினார். நேற்று 43 பந்துகள் பிடித்தவர் 10 பவுண்டரி, 3 சிக்ஸர் என்று அதிரடி காட்டினார். மொத்தம் 79 ரன்கள் எடுத்து பெங்களூர் பவுலர்கள் பந்துகளை துவைத்து எடுத்தார்.
எப்படி
நேற்று இவரின் ஆட்டம் மிகவும் நேர்த்தியாக இருந்தது. இந்திய அணியின் மிஸ்டர் 360 என்று சொல்லும் அளவிற்கு மைதானத்தில் அனைத்து பக்கங்களிலும் அதிரடியாக ஆடினார். இவர் பேட்டிங் செய்யும் போது கோலி தொடங்கி பெங்களூர் வீரர்கள் எல்லோரும் இவரை முறைத்தபடி இருந்தனர். இவருக்கும் கோலிக்கும் நிலவி வரும் சின்ன உரசல் காரணமாக மொத்த பெங்களூர் அணியும் இவரை முறைத்தபடி இருந்தது.
முறைப்பு
நேற்று சூர்ய குமார் யாதவ் பேட்டிங் செய்த போது கோலி பல முறை அவரை முறைத்தபடி அருகில் வந்தார். அதிலும் 13 ஓவரின் முடிவில் சூர்ய குமார் யாதவ் அடித்த பந்தை கோலி பிடித்துவிட்டு சூர்ய குமார் யாதவை முறைத்து பார்த்தார். சூர்ய குமார் யாதவும் விடாமல் கோலியை முறைத்து பார்த்தார். இதனால் கோபம் அடைந்த கோலி வேகமாக சூர்ய குமார் யாதவிடம் வந்தார்.
அருகில் நின்றார்
சூர்ய குமார் யாதவ் அருகில் நின்று கொண்டு பந்தை தேய்த்துக் கொண்டு இருந்தார். சூர்ய குமார் யாதவை சீண்டும் வகையில் கோலி இப்படி செயல்பட்டார். 3 வருடமாக சிறப்பாக ஆடியும் சூர்ய குமார் யாதவை கோலி இந்திய அணியில் எடுக்கவில்லை. இதனால் ஏற்பட்ட கோபம் காரணமாக சூர்ய குமார் யாதவ் கோலியை முறைத்து பார்த்தார். இதனால்தான் கோலியும் சூர்ய குமார் யாதவை சீண்டினார்.
பதிலடி
ஆனால் சூர்ய குமார் யாதவ் கோலியிடம் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டார். அதன்பின் அதிரடி காட்டிய சூர்ய குமார் யாதவ்.. கோலிக்கு வார்த்தைகளால் பதில் சொல்லாமல் தனது பேட்டிங் மூலம் பதில் சொன்னார். அதிலும் கடைசியில் மேட்சை முடித்துவிட்டு.. தனது டீமை நோக்கி.. ''நான் இருக்கேன்.. நான் இங்கதான் இருப்பேன்'' என்பது போல சைகை காட்டினார். மொத்தமாக அவரின் டீம் எழுந்து நின்று சூர்ய குமார் யாதவை பாராட்டியது.
என்ன நடக்கிறது
நேற்று ஒரு முறை கூட மைதானத்தில் சூர்ய குமார் யாதவ் கோபம் அடையவில்லை.அதேபோல் சிரிக்கவும் இல்லை. சூர்ய குமார் யாதவிற்கு தற்போது 30 வயது ஆகிறது. மும்பை அணி, டொமஸ்டிக் கிரிக்கெட் என்று அனைத்திலும் நன்றாக ஆடியும் கூட இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று நடந்த போட்டியில் தனக்கு வாய்ப்பு வழங்க மறுத்த எல்லோருக்கும் தனது பேட்டிங் மூலம் சூர்ய குமார் யாதவ் பதிலடி கொடுத்து இருக்கிறார்.