சிஎஸ்கே நிலை
2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி பரிதாப நிலையில் உள்ளது. 10 லீக் போட்டிகளில் 7 தோல்விகளை சந்தித்துள்ளது அந்த அணி. அந்த அணி பிளே-ஆஃப் செல்ல வாய்ப்பே இல்லை என கூறப்படுகிறது. திட்டமே இல்லாமல் ஆடி சிஎஸ்கே அணி இந்த நிலையை அடைந்துள்ளது.
அணித் தேர்வு
அணித் தேர்வில் சிஎஸ்கே அணி பல சிக்கல்களில் மாட்டிக் கொண்டது. சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் தொடரில் இருந்து விலகிய நிலையில் அவர்களது இடத்தை யாரை வைத்து நிரப்புவது என்ற குழப்பம் அதில் முதன்மையானது.
நான்கு வெளிநாட்டு வீரர்கள்
சிஎஸ்கே அணியில் எந்த நான்கு வெளிநாட்டு வீரர்களை ஆட வைப்பது என்பதில் துவக்கத்தில் குழப்பம் இருந்தது. முடிவில் சாம் கர்ரன், ஷேன் வாட்சன், பாப் டுபிளெசிஸ் ஆகியோர் அணியில் நிலையான இடத்தை பெற்றனர். பிராவோ மற்றும் ஹேசல்வுட் மாற்றி, மாற்றி அணியில் இடம் பெற்றனர்.
வாய்ப்பில்லாமல் தவிக்கும் தாஹிர்
அதனால், அனுபவ சுழற் பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிருக்கு அணியில் இடம் கிடைக்காமல் போனது. கடந்த சீசனில் அதிக விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த அவருக்கு அணியில் இடம் இல்லாதது சிஎஸ்கே அணியின் சரிவுக்கு ஒரு காரணமாக அமைந்தது.
புலம்பல்
இந்த நிலையில் இம்ரான் தாஹிர் தனது நிலை குறித்து புலம்பி இருக்கிறார். அதுவும் டெல்லி அணி வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினின் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கடந்த ஆண்டு பாப் டுபிளெசிஸ்-க்கு ஏற்பட்ட நிலை இந்த ஆண்டு தனக்கு ஏற்பட்டதாக கூறி புலம்பினார்.
சிறந்த அணி
அவர் கூறுகையில், சென்னை தான் சிறந்த அணி. உலகம் முழுவதும் நான் ஆடி உள்ளேன். ஆனால், வேறு எந்த அணியிடம் இருந்தும் இப்படி ஒரு மரியாதை எனக்கு கிடைத்ததே இல்லை. யாரும் என் குடும்பத்தை இப்படி கவனித்துக் கொண்டதில்லை என்றார்.
ஆதரவாக இருப்பார்கள்
சென்னை அணியில் நான் ஆடும் போது அது வித்தியாசமான சூழ்நிலையில் இருந்தது. நான் அவர்களின் கலாச்சாரத்தை ரசிக்கிறேன். அவர்கள் செயல்பாடுகளை பற்றி பேச மாட்டார்கள். எப்போதும் ஆதரவாக இருப்பார்கள். கிரிக்கெட்டில் நீங்கள் ஒருநாள் சிறப்பாக ஆடுவீர்கள். சில நாட்கள் நீங்கள் சரியாக ஆடாமல் போவீர்கள் என்றார்.
ஒன்றும் தெரியவில்லை
அடுத்து தனக்கு அணியில் இடம் கிடைக்காதது பற்றி பேசினார். "எனக்கு அது பற்றி ஒன்றும் தெரியவில்லை. முன்பு பாப் டுபிளெசிஸ் ஒரு சீசன் முழுவதும் வாட்டர் பாயாக தண்ணீர் சுமந்து கொண்டிருந்தார். அது மிகவும் வலிக்கக் கூடியது என்றார்.
இப்போது புரிகிறது
இந்த ஆண்டு அதை நான் செய்கிறேன். பாப் டுபிளெசிஸ் எப்படி உணர்ந்திருப்பார் என எனக்கு இப்போது புரிகிறது. அவர் நல்ல டி20 சராசரி வைத்துள்ள வீரர். இது குறித்து அவரிடம் நான் பேசியும் இருக்கிறேன் என புலம்பினார் இம்ரான் தாஹிர்.
கடினம்
சிஎஸ்கே அணியில் நான்கு வெளிநாட்டு வீரர்கள் சரியாக அமைந்து விட்டால் ஐந்தாவது நபருக்கு அது கடினமானது. எனக்கு ஒரு போட்டியிலாவது ஆட வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன் என்றார் இம்ரான் தாஹிர்.