கடந்த 20ம் தேதி யூஏஇ பயணம்
ஐபிஎல் போட்டிகள் இந்த ஆண்டு யூஏஇயில் வரும் 19ம் தேதி துவங்கவுள்ளது. இதை முன்னிட்டு கடந்த மாதம் 20ம் தேதியையொட்டி 8 அணிகளை சேர்ந்த வீரர்களும் யூஏஇ பயணம் மேற்கொண்டனர். கடந்த மாதம் 20ம் தேதியே 2 முறை ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் யூஏஇக்கு தங்களது பயணத்தை துவக்கினர்.
அபுதாபியில் பயிற்சிகள்
அவர்களை அபுதாபியில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், துபாயில் இருப்பது போல, அங்கு குவாரன்டைன் விதிமுறைகள் தளர்வாக இல்லாததை அங்கு சென்றவுடன்தான் தாங்கள் புரிந்து கொண்டதாக அணியின் சிஇஓ வெங்கி மைசூர் தெரிவித்துள்ளார். பின்னர் சுகாதாரத்துறையுடன் பேசியபொழுது, தங்களது குவாரன்டைனை 6 நாட்களுக்குள் முடித்துக் கொண்டு பயிற்சிகளில் ஈடுபடும்வகையில் பிசிசிஐ ஏற்பாடுகளை செய்திருந்தது தெரியவந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆன்லைனில் நிகழ்ச்சிகள்
ஆனால் அந்நிய தேசத்தில் 6 நாட்கள் குவாரன்டைனை கழிப்பது எளிதானதாக இல்லை என்றும் மைசூர் கூறியுள்ளார். அதற்கென தாங்கள் ஆன்லைனில் குவிஸ் நிகழ்ச்சிகள், அந்தாக்ஷிரி போன்றவற்றை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்தகைய நிகழ்ச்சிகள் மூலம் அணியின் வீரர்களை தாங்கள் உற்சாகமாக வைத்துக் கொண்டதாகவும் அவர் கூறினார்.
சுப்மன் கில் நல்ல பாடகர்
அனைத்து வீரர்களும் கிரிக்கெட்டில் சிறப்பாக உள்ளதுபோல பாட்டு பாடுவதில் அவ்வளவு சிறப்பானவர்களாக இல்லை என்றும் அவர் சுட்டிக் காட்டினார். அணியின் ரிங்கு சிங் மிகவும் மோசமான பாடகராக இருந்ததாகவும் அவர் நகைப்புடன் தெரிவித்தார். அவர் பாடும்போது கட்டில்மீது ஏறி எந்த கட்டுப்பாடும் இன்றி ஆட்டம் போடுவார் என்றும் கூறினார். ஆனால் சுப்மன் கில் நல்ல பாடகர் என்றும் தெரிவித்தார்.