யூஏஇயில் ஐபிஎல் 2020
ஐபிஎல் 2020 போட்டிகள் வரும் செப்டம்பர் 19ல் துவங்கி நவம்பர் மாதம் 8ம் தேதி வரையில் யூஏஇயில் நடைபெறவுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் யூஏஇயில் இந்த தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேதி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மாற்றம் ஏற்படலாம் என்றும் இதுகுறித்து நாளை மறுதினம் நடைபெறவுள்ள ஐபிஎல் நிர்வாக குழு கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
20 வீரர்களுக்கு அனுமதி
வழக்கமாக ஐபிஎல் குழுக்களில் 20 முதல் 25 வீரர்கள் இடம்பெறுவார்கள். இதேபோல 10 முதல் 15 வரையில் ஊழியர்களும் இடம்பெறுவார்கள். ஆனால் இந்த முறை யூஏஇயில் போட்டிகள் நடைபெறவுள்ளதால் இந்த எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. 20 வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதுகாப்பு நடைமுறைகளை சிறப்பாக மேற்கொள்ள முடியும் நிதிச்சுமையும் குறையும்.
வீரர்கள் குறைப்பு
யூஏஇயில் தங்களது பாதுகாப்பு நடைமுறைகளை ஐபிஎல் அணிகள் தாங்களே செய்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் வீரர்கள் உள்ளிட்டவர்களை குறைப்பது அணிகளுக்கு அவசியமாகிறது. கடந்த 2014ல் யூஏஇயில் ஐபிஎல் நடத்தப்பட்ட போதும் இதேபோல குறைவான வீரர்களையே ஐபிஎல் அணிகள் அழைத்து சென்றன.
ஐபிஎல் நிர்வாகிகள் குழு கூட்டம்
இவ்வாறு 20 வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டால், தங்களது அணிகளில் விளையாடாத வீரர்களை ஐபிஎல் அணிகள் குறைக்கும் என்று தெரிகிறது. இதேபோல ஆகஸ்ட் 15ம் தேதியை ஒட்டி அனைத்து அணிகளும் யூஏஇக்கு பயணம் செய்யவுள்ள நிலையில், சிஎஸ்கே முன்னதாகவே ஆகஸ்ட் 10 தேதியே தங்களது பயணத்தை துவக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் நிர்வாகக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படும் விதிமுறைகளின்படி இதில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.