2020 ஐபிஎல் தொடர்
2020 ஐபிஎல் தொடர் மார்ச் 29 அன்று துவங்கி சுமார் 57 நாட்கள் நடப்பதாக இருந்தது. இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் 2019 டிசம்பர் மாதம் நடந்து முடிந்தது. முதல் போட்டியில் முன்னணி அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் மோத இருந்தன.
பிரம்மாண்ட திட்டங்கள்
அது மட்டுமின்றி, இந்த ஆண்டு முதல் *ஐபிஎல் ஆல் ஸ்டார்ஸ்" எனும் சிறிய தொடரையும் நடத்த இருந்தது பிசிசிஐ. இப்படி பெரிய திட்டங்கள் தீட்டி வந்த நிலையில், அனைத்திற்கும் முடிவு கட்டியது மோசமான தொற்று நோயை பரப்பும் கொரோனா வைரஸ்.
கொரோனா வைரஸ் பாதிப்பு
2020ஆம் ஆண்டின் துவக்கத்தில் சீனாவை அச்சுறுத்தியது கொரோனா வைரஸ். அங்கே இருந்து உலக நாடுகள் பலவற்றுக்கும் பரவியது அந்த வைரஸ். அந்த வைரஸ் மனிதர்கள் மூலம் பரவுவதால் மக்கள் கூட்டமாக கூட வேண்டாம் என கூறப்பட்டது.
தள்ளி வைக்கப்பட்டது
உலகம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டும், தள்ளி வைக்கப்பட்டும் வந்தன. அந்த பட்டியலில் ஐபிஎல் தொடரும் சேர்ந்தது. மார்ச் 29 அன்று துவங்க வேண்டிய ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15 வரை ஒத்தி வைக்கப்பட்டது.
ஐபிஎல் நடத்தும் வாய்ப்பு
இந்த நிலையில் ஐபிஎல் தொடரை நடத்தும் வாய்ப்பு குறித்து பிசிசிஐ - ஐபிஎல் அணிகள் துவக்கத்தில் ஆலோசித்து வந்தன. ரசிகர்கள் இல்லாத மைதானம், போட்டிகள் எண்ணிக்கை குறைப்பு என பல வழிகளும் ஆலோசிக்கப்பட்டன.
கொரோனா தாக்கம்
ஆனால், அடுத்த சில நாட்களில் இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் பெரிய அளவில் உள்ளது. தற்போது வரை இந்தியாவில் 1,192 பேர் பாதிக்கப்பட்டு, 102 பேர் மட்டுமே அதில் இருந்து மீண்டுள்ளனர். 1,061 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புடன் உள்ளனர். 29 பேர் பலியாகி உள்ளனர்.
நம்பிக்கை இழப்பு
நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருவதை அடுத்து ஐபிஎல் தொடர் நடத்தும் எண்ணத்தை பிசிசிஐ கை கழுவி விட்டதாக கூறப்படுகிறது. அரசு அடுத்து எடுக்கப் போகும் விசா முடிவு குறித்து மட்டுமே அறிந்து கொள்ள பிசிசிஐ காத்துக் கொண்டுள்ளது.
பிசிசிஐ முடிவு இதுதான்
இது குறித்து ஒரு பிசிசிஐ அதிகாரி கூறுகையில், "ஐபிஎல் இந்த ஆண்டு நடக்காது. அடுத்த ஆண்டு தான் நடக்கும். தற்போது நிலைமை எப்படி இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். யாரும் வீண்முயற்சி எடுக்க மாட்டார்கள்" என்றார்.
அரசு முடிவு
மேலும், "மைதானத்தில் நம்மால் சோசியல் டிஸ்டன்சிங் எல்லாம் செய்ய முடியாது. எனவே, ஐபிஎல் தொடரை அடுத்த ஆண்டு நடத்துவது நல்லது. அதே போல, மெகா ஏலமும் நடைபெறாது. இந்திய அரசிடம் இருந்து இறுதி முடிவு வந்தவுடன் ஐபிஎல் அணிகளிடம் இது குறித்து கூறுவோம். இதே சீசன் அடுத்த ஆண்டு தொடரும்" என்றார் அந்த அதிகாரி.
மக்கள் மனநிலை
ஒருவேளை ஐபிஎல் தொடரை ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் நடத்தினாலும் மக்கள் யாரும் கொரோனா வைரஸ் அச்சம் இருக்கும் நேரத்தில் போட்டிகளை கொண்டாட்ட மன நிலையுடன் பார்க்க மாட்டார்கள் என்பதே உண்மை.